விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அருகே உள்ள தந்திரியான்குப்பம் கடற்கரை சேர்ந்த மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபடு முயன்ற நூற்றுக்கு மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.


தந்திரியான்குப்பம் அடுத்த சின்ன முதலியார் சாவடி மீனவ கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் படகுகள் நிறுத்துவதற்கு போதிய இடம் இல்லாததால் அந்த கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் பக்கத்து கிராமமான தந்திரியான் குப்பம் கடற்கரையில் படகுகளை பல ஆண்டுகளாக நிறுத்தி வருகின்றனர். இதனால் தந்திரியான்குப்பம் மீனவர்களுக்கு படகு நிறுத்துவதற்கு  இடம் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சின்ன முதலியார்சாவடி மீனவ படகுகள் இனிமேல் எங்கள் பகுதியில் படகுகளை நிறுத்துவதற்கு இடம் அளிக்க மாட்டோம். அவர்களை அவர்களிடத்திலேயே படகுகளை நிறுத்திக் கொள்ள மீனவ துறை சார்பில் உத்தரவிடக்கோரி இன்று தந்திரியான்குப்பம் மீனவர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் புதுச்சேரி சென்னை கிழக்கு கடற்கரை சாலை கோட்டகுப்பம் மெயின் ரோட்டில் சாலை மறியல் ஈடுபடுவதற்காக கருப்பு கொடி எந்திவந்தனர்.


அவர்களை கோட்டகுப்பம் காவல் நிலைய போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். உங்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மீனவர்கள் அதை ஏற்காமல் தொடர்ந்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். இச்சம்பவம் கோட்டக்குப்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.