விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.


இந்நிலையில் நேற்று இவ்வழக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சதானந்தன், ஜெயச்சந்திரன், கோபிநாத், ராஜமகேந்திரன் ஆகிய 4 பேர் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., கோதகுமார் ஆகிய 3 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து திமுக வழக்கறிஞர் மனுதாக்கல் செய்தனர். மேலும், இவ்வழக்கில் நேற்று முன்னாள் வானூர் தாசில்தாரும் தற்போது அரசு பணியில் இருந்து ஓய்வுபெற்றவருமான மாணிக்கம் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவர், இவ்வழக்கு சம்பந்தமான கோப்புகளில் என்னிடம் அப்போதிருந்த உயர் அதிகாரிகள் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாகவும், எனக்கு இந்த முறைகேடு பற்றி எதுவும் தெரியாது என்று அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்தார்.


பின்னர் அவரிடம் அரசு தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் குறுக்கு விசாரணை செய்தார். தொடர்ந்து, மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதற்காக இவ்வழக்கு விசாரணை மீண்டும் இன்று நடைபெறும் என நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார். இவ்வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 9 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். அதில் ஓய்வுபெற்ற தாசில்தார் குமாரபாலன், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமாரன், பூத்துறை கிராம உதவியாளர் ரமேஷ், முன்னாள் கிராம உதவியாளர் கோபாலகண்ணன், நில அளவைத்துறை முன்னாள் துணை ஆய்வாளர் நாராயணன், கனிமவளத்துறை முன்னாள் துணை இயக்குனர் சுந்தரம், ஓய்வுபெற்ற தாசில்தார் மாணிக்கம்  ஆகிய 7 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளதால் இந்த வழக்கு தற்போது சூடுபிடித்துள்ளது.