விழுப்புரம் அருகிலுள்ள ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் மூடப்பட்ட மணல் குவாரியில் அமலாக்க துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


விழுப்புரம் அடுத்த ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் ஆறு மாதங்களாக செயல்பட்டு வந்த மணல் குவாரி, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக செயல்படாமல் உள்ளது. இந்நிலையில் இன்று இரண்டு கார் மற்றும் ஒரு வேனில் வந்த 20க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்று குழுக்களாக பிரிந்து ஆற்றில் தற்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அற்றில் எவ்வளவு மணல் அள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து கருவிகளைக் கொண்டும், டிரோன் கேமராக்களை கொண்டும் தற்போது அமலாக்க துறையினால் சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஐந்து பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.




விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்டம் ஏனாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கே.ஹேமராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள வழக்கின் மனுவில், தென்பெண்ணை ஆற்றங்கரையில் 11 ஹெக்டேரில் மணல் குவாரி செயல்பட்டுவருவதாகவும், இந்த மணல் குவாரி செயல்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும், விவசாயம் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.


கருத்துக்கணிப்பு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பையும் கருத்தில் கொள்ளவில்லை என்றும், கிராம பஞ்சாயத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் கருத்தில் கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மணல் குவாரியை மூடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி, ஏனாதிமங்கலத்தில் மணல் குவாரிக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும், மணல்குவாரியை மூட வேண்டும், மணல் அள்ள தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.


இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, 2 பொக்லைன்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 பொக்லைன்கள் பயன்படுத்தப்படுவதாகவும், ஒரு மீட்டர் ஆழத்திற்கு மட்டுமே மணல் அள்ள அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக அள்ளப்பட்டு வருவதாக புகைப்பட ஆதாரங்களை சுட்டிக்காட்டிய நீதிபதி எம்.தண்டபாணி, ஏனாதிமங்கலத்தில் மணல் குவாரி செயல்பட தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு, மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்டோர் 4 வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தார்.