ஜப்பான் நாட்டு தூதுவராக விழுப்புரம் அருகே உள்ள ராதாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி நியமனம் செய்யப்பட்டார்.


தமிழகத்தில் கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கி இருந்தாலும் விழுப்புரம் மாவட்டம் அரசியலிலும், அரசு உயர் பதவியிலும் பலர் தடம் பதிக்க வைத்த பெருமையை கொண்டுள்ள மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. அரசு உயர் பதவியிலும், மத்திய, மாநில அரசின் பல சாதனை திட்டங்களிலும் அங்கம் வகித்தவர்கள் பட்டியலில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களும் இருந்து வருகின்றனர்.


சமீபத்தில் உலக நாடுகளே வியந்து பார்க்கக் கூடிய திட்டமான சந்திராயன்-2 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் விழுப்புரம் பகுதியை சேர்ந்த  ரயில்வே ஊழியரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.


அந்தவகையில், தற்போது விழுப்புரம் அருகே ராதாபுரம் என்ற சாதாரண கிராமத்தை சேர்ந்த அப்பர் - புனிதா தம்பதியின் மகன் சந்துரு (வயது42) என்பவர்தான் ஜப்பான் நாட்டின் தூதுவராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


1982-ம் ஆண்டு பிறந்த சந்துரு விழுப்புரம் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு முடித்து விட்டு பின்னர் காரைக்குடியில் பி.எஸ்.சி. விவசாய பட்டப்படிப்பை முடித்த அவர், தொடர்ந்து டெல்லியில் எம்.எஸ்.சி. அக்ரி, பி.ஹெ.ச்.டி. 2009ல் யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுதிய சந்துரு 2-வது முயற்சியிலேயே அவருக்கு ஐ.எப்.எஸ். பிரிவில் அயல்நாட்டு பணி வாய்ப்பு கிடைத்தது.


பணியில் சேர்ந்தது முதல் 2016 வரை ஸ்ரீலங்காவில் இந்தியாவிற்கான தூதராக அலுவலக முக்கிய பொறுப்பில் இருந்தார். அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா தூதராக அலுவலகத்திலும், பின்னர் 2020 ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய அவர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வகிக்கும் துறையில் அலுவலக தனிச்செயலர் பதவி என முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். ஜப்பான் நாட்டில் இந்தியாவிற்கான 3 துணைத் தூதரகங்கள் உள்ளன. அதில் ஒன்றான ஓசாகா பகுதி தூதுவராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


விழுப்புரம் அருகே ராதாபுரம் என்கிற சாதாரண கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் இந்திய நாட்டின் சார்பில் மிகப் பெரிய பொருளாதார நாடான ஜப்பான் நாட்டின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது விழுப்புரம் மாவட்டத்திற்கு மீண்டும் பெருமை சேர்த்துள்ளது.