விழுப்புரம்: கோலியனூர் அருகேயுள்ள மேல்பாதி கிராமத்தில் பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கோவில் வாயிலில் அமர்ந்து சாதி சான்றிதழ், குடும்ப அட்டைகளை ஒப்படைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டபோது மண்னெண்னையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகேயுள்ள மேல்பாதி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான  தர்மராஜா திரெளபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் இந்து சமய நிலைத்துறை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வராததால் கிராம மக்களே கோவிலுக்கான பராமரிப்பு மற்றும் திருவிழா பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி தீமிதி திருவிழா நடைபெற்றபோது மேல்பாதி காலனி பகுதியை சார்ந்த பட்டியலின மக்கள் கோவிலில் உள்ளே நுழைய முயன்ற போது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோவில் வாயிலில் நின்று சாமி தரிசனம் செய்ய கூறி பட்டியலின மக்களை அனுப்பி வைத்து விட்டனர்.


கோவில் உள்ளே சென்று தான் சாமி தரிசனம் செய்வோம் என பட்டியலின மக்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனையடுத்து நேற்று முன்தினம் ஆட்சியர் அலுவலகத்தை தலித் அமைப்பினர் முற்றுகையிட்டபோது அமைச்சர் பொன்முடி காவல் துறை பாதுகாப்போடு சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனையடுத்து மேல்பாதி கிராம மக்கள் நேற்று மேல்பாதி தர்மராஜா திரெளபதி அம்மன் கோவிலில் கிராம மக்கள் ஒன்றினைந்து சாதி சான்றிதழ், குடும்ப அட்டை போன்ற அரசு ஆவணங்களை ஒப்படைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அப்போது திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கையில் வைத்திருந்த மண்ணெண்ணையை ஊற்றி பட்டியலின மக்களை உள்ளே அனுமதிக்க மாட்டோம் என போராட்டம் செய்தனர். பல ஆண்டுகளாக கிராம மக்கள் யாருமே கருவறைக்கு சென்று சாமி தரிசனம் செய்யாத நிலையில் கோவில் கருவறைக்கு சென்று அனுமதிக்க மாட்டோம் என்றும் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடியை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் மேல் பாதி கிராமத்தில் பரபரப்பு நிலவி வருவதால்  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர