விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட நரசிங்கபுரம் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியினை தூய்மைப்பணியாளர்கள் மூலம் தூய்மை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.


மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பில், விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பொதுமக்களுக்கு சீரான குடிநீர் மற்றும் சுகாதாரமான குடிநீர் விநியோகம் செய்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


மேலும், கடந்த வாரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்து மாவட்ட அளவில் கோடை காலத்தினை முன்னிட்டு பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதை குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடத்தியபொழுது அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகளை முழுவதும் சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.


அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள 3972 மேல்நிலைத் நீர்த்தேக்கத் தொட்டிகளை 15.05.2024 இன்று ஒட்டுமொத்தமாக தூய்மை செய்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.


அதனடிப்படையில், இன்றைய தினம், விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட நரசிங்கபுரம் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியினை தூய்மைப்பணியாளர்கள் மூலம் தூய்மை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது, குடிநீரில் முறையான நீர் தாதுஉப்புக்கள் சேர்க்கப்பட்டுள்ளதா, நீரின் அளவிற்கேற்ப குளோரினேஷன் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


நீரின் தன்மை


விழுப்புரம் மாவட்டத்தில், 15 நாட்களுக்கு ஒருமுறை அனைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளும் தூய்மை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுவதோடு, ஒவ்வொரு முறையும் நீரேற்றம் செய்யும்போது குளோரினேஷன் செய்திடவும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக, நீரின் தன்மை அறிவதற்கான கருவிகள்  வழங்கப்பட்டுள்ளது. இதனை சரிவர கையாள்வதற்கு ஊராட்சி செயலர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. நீரின் தன்மை அறிந்து அதுதொடர்பாக பதிவேட்டில் பதிவு செய்திடவும், அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ளும்பொழுது பதிவேட்டினை ஆய்வு செய்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகராட்சிகளில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியினை சுத்தம் செய்யும் பொழுது ஜியோடேக் செய்து அதனை தங்களுடைய வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்திட நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


குடிநீர் கிணறுகள் சுற்றிலும் கம்பி வேலி


மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகளிலும் உள்ள படிக்கட்டுகளில் மற்ற நபர்கள் எவரும் செல்லாத வகையில் பாதுகாப்பு கதவுளும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் மேற்புறங்களை மூடுவதற்கும், அனைத்து பகுதிகளிலும் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய அனைத்து குடிநீர் கிணறுகள் சுற்றிலும் பாதுகாப்பிற்காக கம்பி வேலி அமைப்பதற்கு துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தெரிவித்தார்.