விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஊராட்சி அலுவலக திறப்பு விழாவில் அமைச்சர் மஸ்தான் பெயர் இடம்பெறாததால் 12 ஊராட்சி குழு உறுப்பினர்கள் விழாவை புறக்கணித்தனர்.


புறக்கணிக்கப்பட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான்


விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகம் 84 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு இன்று உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி இன்று திறந்து வைத்தார். திறப்பு விழாவில் மாவட்ட ஊராட்சி குழு திறப்பு விழாவிற்கு 28 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் மற்றும் திட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள வருகை புரிந்தனர். அப்போது கல்வெட்டு திறப்பு விழாவில் சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பெயர் கல்வெட்டில் இடம்பெறாததால் செஞ்சி, மேல்மலையனூர், மரக்காணத்தை சார்ந்த 12 ஊராட்சி குழு உறுப்பினர்கள் திறப்பு விழாவினை புறக்கணித்து சென்றனர். 


அமைச்சர் பொன்முடி மற்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகிய இருவர் ஆதரவாளர்கள் இடையே அடிக்கடி கோஷ்டி பூசல் ஏற்படுவதும் பேனர் வைப்பதில் பிரச்னை ஏற்படுவதும் வழக்கமான ஒன்றாக சமீப காலத்தில் மாறிப்போன பிறகு, மீண்டும் ஒட்டுமொத்த விழுப்புரம் மாவட்டத்தை தனது ஆளுமைக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி மெனக்கெட்டு வருவதாக கூறப்பட்டது.


செல்வாக்கை விரிவுப்படுத்த முயற்சி


தெற்கு மாவட்டத்திற்குள் செல்வாக்கை செலுத்த அமைச்சர் மஸ்தானும் வடக்கு மாவட்டம் உள்ளிட்ட, ஒட்டுமொத்த விழுப்புரத்திலும் செல்வாக்கோடு இருக்க என அமைச்சர் பொன்முடியும் தொடர்ந்து முயற்சித்து வரும் சூழலில் இருவர் ஆதரவாளர்களிடையே அவ்வப்போது கோஷ்டி பூசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, இரண்டு மாவட்டத்திலும் பொன்முடி பேனர்கள், மஸ்தான் புகைப்படம் போட்ட பேனர்கள் வைப்பதில் இருவர் ஆதரவாளர்களுக்கும் இடையே எப்போதும் கடும் போட்டா போட்டி நிலவி வருகிறது. அமைச்சர் மஸ்தான் ஆதரவாளர்கள் பேனர் வைக்கும்போது பொன்முடி புகைப்படத்தை தவிர்ப்பதும், பொன்முடி ஆதரவாளர்கள் பேனர் வைக்கும்போது மஸ்தான் புகைப்படத்தை சிறிய அளவில் போடுவதோ அல்லது தவிர்ப்பதோ நடந்து வருகிறது.


துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி


பொன்முடி திமுக துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக இருப்பதால், மாவட்டத்தில் பேனர் வைத்தால் அவரது புகைப்படம் இருக்க வேண்டும் என்பது மரபாக இருக்கிறது. ஆனால், பல நேரங்களில் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் ஆதரவாளர்கள் வேண்டுமென்றே பொன்முடி புகைப்படத்தை தவிர்த்து உள்ளடி அரசியல் செய்வதாக பொன்முடி ஆதரவாளர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.


கடந்த சில மாதங்களுக்கு முன்பு செஞ்சி பேருந்து நிறுத்தம் அருகே அமைச்சர் பொன்முடியின் தீவிர ஆதரவாளரான மாநில தீர்மானக் குழு உறுப்பினர் செஞ்சி சிவா வைத்த பேனரை அமைச்சர் மஸ்தான் தரப்பினர் கிழித்ததாக புகார் எழுந்தது. அதேபோல் விழுப்புரத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மஸ்தானிடம் இருந்து அமைச்சர் பொன்முடி மைக்கை பிடுங்கியது திமுகவினர் மத்தியிலேயே பரபரப்பாக பேசப்பட்டது. இவ்வாறாக தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் ஆகியோரின் கோஷ்டி பூசலும், குடுமிப்பிடி சண்டையும் நடைபெறுவது வாடிக்கையான ஒன்றாகி போனது.


பொன்முடியின் புகைப்படம் இருந்த பேனர் கிழிப்பு 


இந்த நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் பொன்முடியின் தீவிர ஆதரவாளரான 17வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் இளங்கோவன் ரேணுகா தரப்பில் இரு இடங்களில் அமைச்சர் மஸ்தான் புகைப்படத்தை சிறிய அளவிலும், அமைச்சர் பொன்முடியின் புகைப்படத்தை பெரிய அளவிலும் போட்டு பேனர் வைக்கப்பட்டது. இந்த பேனரை அகற்ற வேண்டும் என திண்டிவனம் போலீசாருக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆதரவாளர்கள் நெருக்கடி கொடுத்ததாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் யாரோ சிலர் பொன்முடியின் புகைப்படம் இருந்த பேனரை கிழித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொன்முடியின் ஆதரவாளர்கள் ஒன்று திரண்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.


செஞ்சி மஸ்தான் பதவி பறிப்பு


இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட கழக செயலாளராக பணியாற்றி வந்த செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்களை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து அவருக்கு பதிலாக திண்டிவனம் ஜெயபுரம் பகுதியைச் சேர்ந்த டாக்டர்ஸ் சேகர் என்பவரை விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


அமைச்சர் செஞ்சி மஸ்தான் பெயர் புறக்கணிப்பு


இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகம் 84 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு இன்று உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி இன்று திறந்து வைத்தார். திறப்பு விழாவில் மாவட்ட ஊராட்சி குழு திறப்பு விழாவிற்கு 28 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் மற்றும் திட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள வருகை புரிந்தனர். அப்போது கல்வெட்டு திறப்பு விழாவில் சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பெயர் கல்வெட்டில் இடம்பெறாததால் செஞ்சி, மேல்மலையனூர், மரக்காணத்தை சார்ந்த 12 ஊராட்சி குழு உறுப்பினர்கள் திறப்பு விழாவினை புறக்கணித்து சென்றனர்.