புதுச்சேரி: ஆட்சி அதிகாரத்தில் பங்கு துணை முதல்வர் பதவி என்று ஆசை வார்த்தைகள் கூறி தன்னை வீழ்த்தி விட முடியாது என்றும் கூட்டணி தர்மத்திற்காக தனக்காக திறந்து வைக்கப்பட்டிருந்த அதிமுக கதவை மூடியது போன்று விஜய் திறந்து வைத்திருந்த கதவையும் மூடினேன் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் பேசினார்.
புதுச்சேரி அடுத்த திருபுவனையில் புதிதாக அமைக்கப்பட்ட அம்பேத்கரின் முழு திருவுருவ சிலை திறப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்து தொடர்ந்து கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியவர்களுக்கு விருதுகள் மற்றும் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர்.,..
கிராமங்கள் தோறும் அம்பேத்கர் சிலைகள் அமைப்பதை விட அவர் பெயரில் ஒரு படிப்பகத்தை கட்டி எழுப்ப வேண்டும், அதுதான் அடுத்த தலைமுறைக்கு செய்யக்கூடிய பெரும் செயல் என்று குறிப்பிட்டார். மாணவர்களுக்கு படிக்கின்ற பழக்கத்தை உருவாக்க வேண்டும் படிப்பது என்பது ஒரு கலை என்று தெரிவித்தார்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சியாக பாரதிய ஜனதா இருந்தது, சாதி ஒழிப்பு, சகோதரத்துவம், சமத்துவம், இட ஒதுக்கீட்டை ,வெளிப்படையாக ஆதரிக்காத கட்சி ஒன்று இந்தியாவில் உண்டு என்றால், அது பிஜேபி தான் என குற்றம் சாட்டினார்.
மற்ற கட்சிகள் போலியாக பேசுகிறார்கள், நடைமுறையில் இருக்கிறதோ இல்லையோ ஆனால் பேசுகிறார்கள், ஆனால் பாரதிய ஜனதா என்றைக்காவது சாதி ஒழிக என்று சொன்னது உண்டா, பெண்களுக்கான சமத்துவத்தை பெண்களுக்கான உரிமைகளை முன்னிறுத்தி உயர்த்தி பேசியது உண்டா? சாதி வழக்கத்தை எதிர்த்து ஆர்எஸ்எஸ் இயக்கம் என்றைக்காவது போராடியது உண்டா என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
தமிழகத்தின் நடைபெற்ற வேங்கை வயல், கள்ளக்குறிச்சி மேல் பாதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளாக இருந்தாலும் திமுக அரசின் தமிழக காவல் துறையை கண்டித்து பல போராட்டங்களை நடத்தி உள்ளதாக தெரிவித்த திருமாவளவன், அப்போது எல்லாம் அதிமுக போராட்டங்களை நடத்த வேண்டியது தானே என்றும் திமுகவோடு தொடர்ந்து நாம் பயணிக்கிறோம் என்பதையே பலர் கேலி பேசுகிறார்கள்.
தான் கூட்டணிக்காக எல்லா கதவுகளையும் திறந்து வைத்திருக்கவில்லை, பாஜக, அதிமுகவோடும் தேவைப்பட்டால் மற்ற கட்சிகளோடு கூட்டணிக்காக ஒரே நேரத்தில் இரண்டு அணியிலும் பேசிக்கொண்டே இருக்கிற ராஜதந்திரம் தமக்குத் தெரியாது, பாஜகவும் பாமகவும் இருக்கும் அணியில் ஒருபோதும் விடுதலைக் சிறுத்தைகள் கட்சி இடம்பெறாது என்று திட்டவட்டமாக குறிப்பிட்டார்.
புதிதாக கட்சி தொடங்கி இருக்கிற நடிகர் விஜய் கூட புத்தக வெளியீட்டு விழாவிற்கு வரும்படி அழைப்பு விடுத்த போது அது ஒரு தவறான யூகத்தை கொடுத்து விடக்கூடாது நாம் இருக்கிற அணியில் தொடர வேண்டும் அப்படி ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி விடக்கூடாது அதன் மூலம் நாம் இருக்கிற அணி பலவீனப்பட்டால் பாரதிய ஜனதாவுக்கு சாதகமாக அரசியல் சூழல் மாறிவிடும் என்பதையெல்லாம் யூகித்து அந்த விழாவையே புறக்கணித்தேன். எனக்காக திறந்து வைக்கப்பட்டிருந்த அதிமுக கதவை மூடியது போன்று விஜய் திறந்து வைத்திருந்த கதவையும் மூடினேன் என்று குறிப்பிட்ட திருமாவளவன் ஆட்சியில் பங்கு துணை முதல்வர் பதவி என்று என்ற ஆசை வார்த்தைகளால் தன்னை வீழ்த்தி விட முடியாது என்று தெரிவித்த திருமாவளவன்.. அரசியலில் தான் எடுக்கிற முடிவு ஒவ்வொன்றும் அம்பேத்கரின் கருத்துக்களை மனதில் வைத்துக் கொண்டு தான் முடிவெடுப்பதாகவும் தெரிவித்தார்.