கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் 28 பேர் திடீரென ஒப்பந்தம் முடிந்து விட்டதாக கூறி பணி நீக்கம் செய்துள்ளனர். இதனால் ஊழியர்கள் வசூல் மையங்களை பூட்டிவிட்டு அலுவலகம் எதிரே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அவர்களுக்கு ஆதரவாக மற்ற ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஊழியர்களிடம் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு  உடன்பாடு எட்டாததால் தொடர்ந்து மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக மூன்றாவது நாளாக கட்டணம் செலுத்தாமல் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்து செல்கின்றனர். தங்களை மீண்டும் பணி அமர்த்தப்படும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும் இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்...


உளுந்துர்பேட்டை செங்குறிச்சி, பெரம்பலூர் திருமாந்துறை  தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் பணியாற்றி வந்த 250 தொழிலாளர்களில் 54 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கான நடைமுறைகளோ, விதிகளோ கடைபிடிக்கப்படவில்லை. இந்த  நடவடிக்கை சட்டவிரோதமானது எனவும்  தொழிலாளர் நிரந்தரப்படுத்துதல் சட்டம் 1981ன் படி 2 ஆண்டுகளில் 48 நாட்கள் பணியாற்றியவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். அதன்படி 13 ஆண்டுகளாக பணியாற்றி வரும் 250 பேரும் பணி நிலைப்பு செய்யப்பட வேண்டும். அதை செய்வதற்கு பதிலாக பணி நீக்கம் செய்வது கண்டிக்கத்தக்கது எனவும் சட்டவிரோத பணிநீக்கத்தை கண்டித்தும், நீக்கப்பட்டதைக் கண்டித்தும் சுங்கச்சாவடிகளில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுடன் நெடுஞ்சாலைகள் ஆணையமோ, மாவட்ட நிர்வாகமோ பேச்சு நடத்த முன்வராதது  பெரும் அநீதி ஆகும் மேலும்  ஆட்குறைப்புக்கான எந்த நடைமுறைகளையும் பின்பற்றாமல் செய்யப்பட்டுள்ள இந்த பணி நீக்கத்தை தமிழக அரசு தலையிட்டு ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர்கள் அனைவருக்கும் பணி நிலைப்பு வழங்குவதற்கும் சுங்கச்சாவடியை நிர்வகிக்கும் நிறுவனத்திற்கு அரசு ஆணையிட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.


இந்த நிலையில் நேற்று மாலையில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ. மணிக்கண்ணன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தனர். தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் சுங்கச்சாவடியில் பணியில் சேர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ. கூறினார். தொடர்ந்து சுங்கச்சாவடி தலைமை மேலாளர் ராம்கிசோரிடம் பேசிய எம்.எல்.ஏ.க்கள் 13 ஆண்டு காலம் பணியாற்றிய ஊழியர்களை முறையற்ற வகையில் வெளியே அனுப்புவதை தவிர்த்து அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.