விழுப்புரம்: போக்குவரத்து கழக சங்கங்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றவில்லை என்றால் வருகின்ற 4ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என அண்ணா தொழிற்சங்க மாநில பேரவை செயலாளர் கமலக்கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு அண்ணா தொழிற்சங்க பேரவை மற்றும் கூட்டமைப்பு சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணா தொழிற்சங்க விழுப்புரம் மண்டல பொறுப்பாளர் கணேசன் தலைமையில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் பாஸ்கர், அய்யாக்கண்ணு, பாட்டாளி தொழிற்சங்க மண்டல தலைவர் ஞானதாஸ், மண்டல செயலாளர் தங்ககுப்புசாமி, பொருளாளர் சிவாஜி, தே.மு.தி.க. தொழிற்சங்க மண்டல தலைவர் சேகர்,  மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன், பாட்டாளி தொழிற்சங்க மாநில தலைவர் ஞானமூர்த்தி, பி.எம்.எஸ். பேரவை மாநில தலைவர் விமேஷ்வரன், தமிழ்மாநில தொழிற்சங்க காங்கிரஸ் பேரவை பொதுச்செயலாளர் மூர்த்தி, துணைத்தலைவர் சிங்காரம் ஆகியோர் கலந்துக்கொண்டனர். 


போக்குவரத்துத்துறையை சீரழிக்க கூடாது, ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும், தொழிலாளர்களுக்கு தரமான உணவை வழங்க வேண்டும், புதிய ஓட்டுனர்கள், நடத்துனர்களை உடனே பணியமர்த்த வேண்டும், போக்குவரத்துத்துறையை தனியார் மயமாக்குவதில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 


அப்போது செய்தியாளர் சந்திப்பில் கூறிய கமலகண்ணன்...


போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை திமுக அரசியல் தொடர்ந்து புறக்கணித்துவருவதாகவும் அவர்களுடைய திட்டங்களை முடக்கி வைப்பதோடு காலி பணியிடங்களை நிரப்பாமல் தற்போது பணி செய்யும் பணியாளர்களுக்கு பணிச்சுமையை ஏற்படுத்துவதாகவும் 16,000 காலி பணியிடங்கள் உள்ளதாகவும் புதிய பேருந்துகள் இதுவரை ஒரு பேருந்து கூட வாங்கவில்லை எனவும் பழுதான பேருந்துகளை சீரமைக்கப்படாமல் உதிரி பாகங்கள் இன்றி பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளதாகும், நான்காயிரம் பேருந்துகள் பழுதடைந்து உள்ளது எனவும் அதனை சீரமைக்க டெக்னீசியன்கள் பற்றாகுறை இருப்பதால் அதற்கான பணியிடங்களையும் தமிழக அரசு நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன, ஆனால் அரசு நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்டு வருவதாகும் நாளை மீண்டும் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் பேச்சு வார்த்தையில் கோரிக்கையில் ஏற்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வர வில்லை என்றால் ஏற்கனவே அறிவித்தபடி நான்காம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெறும் என எச்சரித்துள்ளார்.