விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடற்கரைப் பகுதிகளில் உள்ளது, இந்த கடற்கரை பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள்  இங்கு வந்து குளித்து விட்டு செல்வது வழக்கம், மிக்ஜாம் புயல் தாக்கத்தால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது, இதனால் மீனவர்களே மீன் பிடிக்க கடலுக்கு கடந்த மூன்று நாட்களாக செல்லவில்லை, இந்நிலையில் மரக்காணம் மாற்றுக் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கடலில் குளிப்பதற்கும், பார்வையிடவும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஆட்டோ, மோட்டார் சைக்கிளில் வந்தனர்.


கடலின் சீற்றம் அதிகமாக இருப்பதால் கடலோர காவல் படையினர் தடை விதித்திருந்தனர், தடையை மீறி அங்கு பொதுமக்கள் வருவதை கண்ட கடலோர காவல் படையினர் இ.சி.ஆர்.-ல் பேரிகார்டுகள் வைத்து பொதுமக்களை ஏற்றி வந்த ஆட்டோ, கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிளையும் திருப்பி அனுப்பினர். மேலும், ஏற்கனவே தீர்த்தவாரி கடல் பகுதிக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்தி கடல் சீற்றத்தால் அலைகள் ஆர்பரித்து வருகின்றன. இதனால் கடற்கரை ஆழமாக இருப்பதால் குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவே அனுமதி கிடையாது என்று அறிவுரை கூறி திருப்பி அனுப்பினர். மேலும் தொடர்ந்து கடலோர பகுதிகளில் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.


மிக்ஜாம் புயல்


மிக்ஜாம் புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,


மிக்ஜாம் புயல் சென்னைக்கு மிக அருகில் கடந்து செல்வதால், மிக கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், இன்று (03-12-2023) முதல் பொதுமக்கள் பின்வரும் எச்சரிக்கையை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


1. இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரப்பூர்வமான அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.


2. அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக வானொலி மற்றும் தொலைக்காட்சியை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.


3. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிருவாகத்தின் அறிவுரையின் பேரில் முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும்.


4. முக்கியப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.


5. ஒரு சில நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான உணவு, நீர், பால் மற்றும் மருந்துகளை கையிருப்பில் வைக்க வேண்டும்.


6. கயிறு, மெழுகுவர்த்தி, கைமின் விளக்கு (torch light), அவசர விளக்கு (emergency light), தீப்பெட்டி, மின்கலங்கள் (batteries), மருத்துவகட்டு (band aid), உலர்ந்த உணவு வகைகள், குடிநீர், மருந்துகள் மற்றும் குளுகோஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருக்க வேண்டும்.


7. பலத்த காற்று காரணமாக ஆஸ்பெஸ்டாஸ் மற்றும் தகடுகளாலான மேற்கூரைகள் பறந்து விழுவதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் மொட்டை மாடிகளில் நின்று வேடிக்கை பார்க்க வேண்டாம். மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும்.


8. ஆபத்தான இடங்களிலும், நீர்நிலைகளுக்கு அருகிலும் தன்படம் (செல்ஃபி) எடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.


9. மரத்தடியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்.


10. புயலின் காரணமாக பலத்த காற்றுடன் அதி கன மழை பெய்யும். இதனால், மின்கம்பங்கள், மின்கம்பிகள், மரங்கள் விழுவதற்கு வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவையில்லாமல் வெளியில் வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.


11. புயல் தொடர்பான எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.


12. அவசர உதவிக்கு பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்


 * மாநில அவசரகால செயல்பாட்டு மையம் – 1070


*  வாட்ஸ் அப் எண். – 94458 69848


*  மாவட்ட அவரகால செயல்பாட்டு மையம் – 1077


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது