விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திண்டிவனம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் 1-வது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி ரகுமான் தலைமையில் நடைபெற்றது. இதில், திண்டிவனம் நீதிமன்ற நீதிபதிகள் சுதா, தனலட்சுமி, இளவரசி, வாசுதேவன், சௌந்தர்யா, தாயுமானவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


முகாமில் சிறப்புரையாற்றிய 1- வது கூடுதல் மற்றும் அமர்வு நீதிபதி ரகுமான் அவர்கள் கூறியதாவது :-


ஏழை எளிய மக்கள் தங்களது மனுக்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தால் சட்டப்பணி குழுக்கள் மூலம் அதற்காக நீதிமன்றம் சார்பில் ஒரு வழக்கறிஞர் அமைக்கப்பட்டு அவரது தலைமையில் வழக்கு நடைபெறும் எனவும் இதற்காக பொதுமக்கள் இடத்தில் எந்த பணமும் கேட்கப் பட மாட்டாது எனவும் தெரிவித்தார். ஏழை எளிய மக்களுக்கு இது போன்ற வழிவகைகள் தெரிவதில்லை அதை அனைவரும் அறிந்து பயன்பெற வேண்டும் எனவும் கூறினார்.


தொடர்ந்து பேசிய அவர் “சொத்து பிரச்சினைகள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் வருவதற்கு காரணம் அவர்களின் குடும்பங்கள். சிறு வயதில் தன்னுடைய அண்ணன், அக்கா ஆகியோர் மீது காட்டிய பாசம் பெரியவர்கள் ஆனவுடன் எங்கு செல்கிறது? தனது தம்பி தனது அக்கா என்று நினைத்து போனால் வழக்குகள் தேவையில்லை. சமரசத்தில் முடிந்து விடும். 12.03.2022 லோக் அதாலத் நடைபெற உள்ளது. அதை மக்கள்  முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதில் சமரசம் செய்துகொள்ளும் வழக்குகளுக்கு மறுபடி அப்பில் கிடையாது. அதனால், இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார். 




மேலும், தற்போது அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள வலிமை திரைப்படத்தை பார்த்தீர்களா என பொதுமக்களிடத்தில் கேள்வி எழுப்பினார். அப்படத்தில் உள்ள கருத்து நல்ல கருத்து என்றாலும், இன்றைய கால இளைஞர்களின் மனதில் தாங்களும் அது போன்ற அதிவேக பைக் வாங்கி அதை வேகமாக ஓட்ட வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கிறது எனவும் எடுத்துக்காட்டாக சில தினங்களுக்கு முன்பு நடந்த செய்தி ஒன்றை கூறினார். ஒரு தாய் தனது மகனுக்காக மூன்று லட்ச ரூபாய் செலவு செய்து இருசக்கர வாகனம் வாங்கி கொடுக்கிறார். அது எடுத்துச் சென்று அந்த இளைஞன் வாகன விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான். இதற்கு அந்தத் தாய் தான் முழுப் பொறுப்பு. சிறுவயதில் இருந்து குழந்தைகளை ஒழுங்காக வளர்க்க வேண்டும் எனவும் கூறினார். வலிமை படம் குறித்து நீதிபதியின் இந்த கருத்து அஜித் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.