நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே உள்ள நீர்முளை பகுதியைச் சேர்ந்தவர் ராமு (65) இவர் தனது சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகிறார், இவருடைய மனைவி லலிதா (60). இவர்களது மகள் பிரேமலதா. இவர் சென்னை ஆவடி காமராஜ் நகரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் ராமுவுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவா் சென்னையில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்து ,தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடிவு செய்தார். இதற்காக அவரது மருமகன் ரமேஷ், தனது காரை மாமனார் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அந்த காரை சென்னை ஆவடி ஜே.பி.எஸ்டேட் பகுதியை சேர்ந்த கோதண்டம் (45) என்பவர் ஓட்டி சென்று உள்ளார். இதையடுத்து அந்த காரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சொந்த ஊரில் இருந்து ராமு, லலிதா ஆகியோர் சென்னைக்கு புறப்பட்டனர்.





கடலூர் பச்சையாங்குப்பம் பகுதி அருகே  நேற்று அதிகாலை 4.45 மணிக்கு கார் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தறிகெட்டு ஓடி சாலையோர பனை மரத்தில் மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரில் பயணம் செய்த கோதண்டம், லலிதா ஆகியோர் காரின் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பலத்த காயமடைந்த ராமுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவரும் பரிதாபமாக இறந்தார்.




இது குறித்த தகவலின் பேரில் கடலூர் துறைமுகம் காவல் துறையினர், விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கு உள்ளான கார் மீட்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து  விபத்து நடந்ததற்கு டிரைவர் தூங்கியது தான் காரணமா இல்லை வேறேதும் காரணம் உள்ளதா விசாரணை நடத்தி வருகின்றனர் ஏனெனில், சென்னை நோக்கி சென்றுகொண்டு இருந்த கார் இடது புறத்தில் இருந்து வடது புறத்தில் இருந்த மரத்தில் இடித்துள்ளது. விபத்தில் பலியான டிரைவர் கோதண்டத்திற்கு பரமேஸ்வரி என்ற மனைவியும், நிர்மல் என்கிற மகன், மற்றும் கீர்த்தனா என்கிற மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளது  குறிப்பிடத்தக்கது .