விழுப்புரம் : தமிழகத்தில் மெச்சூரிட்டி இல்லாத ஒரே அரசியல் வாதி பாஜக தலைவர் அண்னணாமலை தான் என்றும்  பாஜகவிற்கு திமுகவிற்கும் ரகசிய உறவு உள்ளதால் தான் கார்பந்தயத்திற்கு மத்திய அரசு சார்பில் 24 மணி  நேரத்திற்குள் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சி.வி. சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார். 

 

விழுப்புரம் அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த  மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் ”சென்னை மாநகரம் வரலாறு காணாத மழையினால் தத்தளித்து கொண்டிருக்கிறது.  சென்னை மழையினால் தத்தளிக்கிறது. சாலைகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மழை நீர் பாதிப்பினை கவனிக்க வேண்டிய  முதலமைச்சரும் அமைச்சரும் இன்றைக்கு 8 ஆம் தேதி கார்பந்தய போட்டி நடத்துவதற்காக கவனம் செலுத்தி வருகின்ற்னர்.
  

 

கார்பந்தயத்திற்காக 242 கோடி ரூபாய்க்கு செலவு செய்து திமுக அரசு கார் பந்தயம் நடத்துகிறது. இது தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே கண்டனம் தெரிவித்துள்ளார். மற்ற  கட்சியினர் மெளனம் காத்து வருகிறார்கள். இதில்  பாஜகவிற்கும் திமுகவிற்கும் ரகசிய உறவு உள்ளதால் இது தொடர்பாக அண்ணாமலை வாய்திறக்காமல் உள்ளார். கார்பந்தயத்திற்காக மத்திய அரசு சார்பில் 24 மணி  நேரத்திற்குள் அனுமதி வழங்கபட்டுள்ளது. திமுக அரசு ஒரு விளம்பர அரசாக உள்ளது. காஞ்சிபுரத்தில் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்ததாக கொடுக்கப்பட்ட புகாரில் அம்மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்காமல் மறைத்துள்ளார். நீலகிரியில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதையடுத்து சிறுமிக்கு கைவிலங்கு போட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து சென்ற அவல நிலை திமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ளது.

 

கார் பந்தயத்திற்காக தமிழக அரசு 242 கோடி செலவு செய்துள்ளது குறித்து முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும். ஆவினில் மேஜிக் பாலை நிறுத்திவிட்டு சொகுசு வாழ்க்கையை தமிழக அரசு நடத்தி உள்ளது. தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. மத்திய அரசாங்கத்தில் பணியாற்றுகின்றவர்கள் தாக்கபடுகின்ற சம்பவமும் இங்கு நடைபெறுகிறது. அமலாக்க துறையின் மூலமாக தமிழகத்தில் மணல் குவாரியில்  ஊழல் நடைபெற்று கொண்டிருப்பதை வெளிகொண்டு வந்து மணல் கொள்ளையில் 420 கோடி அளவிற்கு ஊழல் நடைபெற்றிருப்பதை  வெளி கொண்டு வந்துள்ளதற்கு நீதிமன்றமே பாராட்டு தெரிவித்துள்ளது. அமலாக்க துறை அதிகாரி லஞ்சம் பெற்றிருப்பதாக தெரிவிப்பது அதிகாரி குற்றம் செய்திருந்தால்  நடவடிக்கை எடுக்கலாம்.  ஆனால் இரவில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதால் சந்தேகம் எழுகிறது. 

 

மணல் குவாரியில் முறைகேடு நடைபெற்று இருப்பது குறித்து அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிற நிலையில்  எந்த ஆண்டிலிருந்து எந்த ஆண்டு வரை ஊழல் நடைப்பெற்றது என்பது குறித்து அமலாக்க துறையினர் கணக்கெடுப்பதை பொறுத்தே தெரியும். அது அதிமுக ஆட்சியில் மணல் எடுக்கப்பட்டது குறித்து கணக்கெடுத்து விசாரனை செய்தாலும் அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். தமிழகத்தில் மெச்சூரிட்டி இல்லாத ஒரே அரசியல் வாதி பாஜக தலைவர் அண்ணாமலை தான்” பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.