விழுப்புரம்: தை பொங்கலை முன்னிட்டு விழுப்புரம் வணிக வீதியில் புத்தாடைகள் மற்றும் மாடுகளுக்கு தேவையான வண்ண வண்ண கயிறுகள், பூக்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை கொண்டபட உள்ளதால் பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றனர்.




இந்த நிலையில் பொங்கலை முன்னிட்டு விழுப்புரம் வணிக வீதியான எம்.ஜி சாலையில் உள்ள கடைகளில் பொதுமக்கள் பொருட்களை வாங்குவதற்கு அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர், பொங்கல் பண்டிகை என்றாலே சிறப்பு வாய்ந்தது கிராமப்புறம் தான், கிராமப்புறத்தில் குடும்பத்தினர்கள் ஒன்று கூடி பொங்கலிட்டு தைப்பொங்களை கொண்டாடுவதற்கும் மாடுகளுக்கு கொம்பு சீவி வண்ண அலங்காரங்கள் தீட்டி வழிபடுவர்.




இதற்காக எம்.ஜி சாலையில் உள்ள வணிக கடைகளில் மாடுகள் கழுத்தில் அணிவதற்கு  வண்ண வண்ண கயிறுகள், கழுத்து மணிகள், மூக்கணாங்கயிறுகள் உள்ளிட்ட பொருட்களை அதிகளவில் வாங்கிச் சென்றனர் இதே போன்று பூக்களை வாங்குவதற்கும், புத்தாடைகள் வாங்குவதற்கும் இந்த பகுதியில் மக்கள் அதிகமாக திரண்டதால் விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, பொங்கல் பண்டிகை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர், குற்ற செயலை தடுப்பதற்கு வணிக விதிகள் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.




தை மாதம் ஏன் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது?


தை மாதத்தை பொதுமக்கள் ஒவ்வொரு ஆண்டும் மிக முக்கியமான மாதமாகவும், நன்மை தரும் மாதமாகவும் பார்ப்பார்கள். இந்த மாதத்தில்தான் தங்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் நிகழும் என்றும், தங்கள் பிரச்சினைகள் தீரும் என்றும் மக்கள் நம்புகின்றனர். 


 




நெல், கரும்பு, மஞ்சள் போன்றவற்றை அறுவடை செய்யும் காலம் இது. இந்த மாதத்தில் நிச்சயதார்த்தம், திருமணங்கள் மற்றும்  புது வீடு பால் காய்ச்சுதல் போன்ற நற்காரியங்களை மக்கள் அதிகளவில் செய்வர்.