புதுச்சேரி: புதுச்சேரியில் கடல் சீற்றத்தால் 5-க்கும் மேற்பட்ட படகுகள் மற்றும்  ரூ.1 கோடி மதிப்பிலான வலைகள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.

Continues below advertisement

புதுச்சேரியில் கடல் சீற்றம் - கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட படகுகள்

புதுச்சேரியில் நேற்று இரவு கனமழை பெய்தது. அதிகபட்சமாக காலாபட்டில் சுமார் 25 செ.மீ. வரை மழை பதிவானது. இந்த பகுதியில் சின்ன காலாப்பட்டு மீனவ கிராமத்தில் மேட்டுப்பகுதியில் இருந்து மழை நீர் வெள்ளம் போல் கடல் நோக்கி வந்தது. இதனால் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன. இதேபோல் மீன்பிடி வலைகளும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. நள்ளிரவு முதல் அதிகாலை வரை மீனவர்கள் போராடி படகுகளை மீட்டனர்.

இருப்பினும் 5-க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்குள் சென்றன. 50-க்கும் மேற்பட்ட படகுகள் பழுதாகி உள்ளதாகவும், ரூ.1 கோடி மதிப்பிலான வலைகள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். கனமழையால் கருவடிக்குப்பம் பிள்ளையார் கோவில் குளம் முழு கொள்ளளவில் ஏறத்தாழ 90 சதவீதம் நிரம்பியது. இதனால் குளக்கரையின் ஒரு பகுதி சரிந்தது.

Continues below advertisement

நிரந்தரமாக தூண்டில் முன் வளைவு அமைக்க வேண்டும்

இதனை இன்று காலை காலாப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுப்பணித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு மேலும் மண் சரிவு ஏற்படாதவண்ணம் பணிகளை உடனடியாக தொடங்க உத்தரவிட்டார். கணபதிசெட்டிகுளம் ராஜகோபால் நகர், ஜான்சி நகர் இணைப்பு ஆகிய பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

மேலும் கணபதிசெட்டிக்குளம் பிள்ளையார் கோவில் குளம் முழுவதும் நிரம்பியுள்ள நிலையில் சாலையோரத்தில் மண் அரிப்பால் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. பாதிப்பு குறித்து அரசு கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும், இந்த பகுதியில் நிரந்தரமாக தூண்டில் முன் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை

புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாகவோ, புயலாகவோ வலுவடையாது என கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், நாளை சென்னை உட்பட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

புயல் உருவாக வாய்ப்பில்லை

கடந்த 16-ம் தேதி தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று நேற்று காலை உருவாகி, அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. இதனால் சென்னை உட்பட அநேக இடங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வந்தது.

இந்நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டிருந்தது. புயல் உருவாகுமா என்பது குறித்தும் இன்றே தெரியவரும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்றே தெரிவித்திருந்துது.

இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ, புயலாகவோ மாற வாய்ப்பு இல்லை என்றும், அந்த  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில், வட தமிழ்நாடு-புதுச்சேரி-தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை கடந்து செல்லும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.