மத்திய சிறையில்  சிறப்பு விசாரணை குழு


புதுச்சேரி: சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் முதியவர் மற்றும் வாலிபர் என இரண்டு பேர் கைது செய்யப்பட்டு காலாபட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிறப்பு விசாரணை குழு தலைவரான முது நிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் ஐ.பி.எஸ் தலைமையிலான 6 போலீசார் கொண்ட குழு கொலையாளிகளை விசாரணை செய்ய காலாபட்டு மத்திய சிறைக்கு சென்றுள்ளனர்.


சிறுமி கொலை வழக்கு 


புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை ஒரு முதியவர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வந்த நிலையில், தற்போது சிறுமியை கொலை செய்தது கருணாஸ் (19) என்கிற வாலிபர் மற்றும் விவேகானந்தன் (57) என்கிற முதியோர் என இருவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவர்களின் கூட்டாளிகளை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும், சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்ட பின்னரே அவர் எப்படி கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவரும். முதற்கட்ட விசாரணையில், முதியவர் சிறுமியை பாலியல் வன்கொடுமையை செய்ய முயற்சித்ததில் அதிர்ச்சியில் சிறுமி உயிரிழந்தது என கூறப்படுகின்றது. பின்னர், அவர் கை மற்றும் கால்களை கட்டி முதியவரின் வேஷ்டியில் வைத்து வாய்காலுக்குள் சிறுமியின் உடலை போட்டுள்ளதாக தெரிவித்து உள்ளனர்.


சிறுமி காணாமல் போன வழக்கு கொலை வழக்காக மாற்றம்


சிறுமி கடந்த 2ஆம் தேதி அன்று மதியம் வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். இது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சிறுமி மாயம், கடத்தப்பட்டிருக்கலாம் என்கிற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், சிறுமி நேற்றைய தினம் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து தற்போது அவ்வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றம் செய்துள்ளனர். மேலும் சிறுமியை கொலை செய்த இருவர் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய உள்ளதாகவும், பிரேத மருத்துவ அறிக்கை வந்த பிறகே போக்சோவில் எந்த பிரிவின் கீழ் வழக்கு பதியப்படும் என்பது தெரியவரும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.


சமூக ஆர்வலர்கள் போராட்டம் 


புதுச்சேரி சிறுமி கொலை விவகாரத்தில் நீதி வழங்க கோரி  இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் கடற்கரை காந்தி சிலை முன்பு போராட்டம் செய்தனர். சிறுமியை கொலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


விசாரணையை தொடங்கிய சிறப்பு குழு 


இந்த சம்பவத்தில் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் சோலைநகர் பகுதியை சேர்ந்த கருணாஸ் (வயது 19), விவேகானந்தன் (57) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இதில் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு கொடூரமாக கொன்று சாக்கடை கால்வாயில் வீசியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சிறுமி கொலை வழக்கில் முழு விசாரணை நடத்த, ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றை புதுச்சேரி அரசு அமைத்தது.


இதையடுத்து, சிறுமி கொலை வழக்கு ஆவணங்களை சிறப்புக் குழு பெற்றுக்கொண்டு, விசாரணையை தொடங்கியுள்ளது. சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில் இருக்கும் மற்ற 5 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் குற்றவாளிகள் 2 பேர், சந்தேகத்தின் பேரில் விசாரணையில் உள்ள 5 பேரின் ரத்த மாதிரி, ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிறுமி கொலை செய்யப்பட்ட இடத்தில் தடய அறிவியல் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.