புதுச்சேரியில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர்களை சிறையில் அடையாளம் காட்டும் அணிவகுப்பு நடைபெற்றது. புதுச்சேரி, மோகன் நகரில் 16 வயது சிறுமியை வீட்டில் அடைத்து விபாசாரத்தில் ஈடுபடுத்தி வழக்கில், வடலுார் புரோக்கர் பால்ராஜ், வாடிக்கையாளரை கோரிமேடு போலீசார் கைது செய்தனர். விசாரணையில், சிறுமியிடம் 27 பேர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது.


இதில் 22 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான 5 பேரை போலீசார் தேடி வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் கஜேந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், கைதான 23 பேரை உறுதிசெய்ய, காலாப்பட்டு சிறையில் அடையாள அணிவகுப்பு நடந்தது. பாதிக்கப்பட்ட சிறுமி, மாஜிஸ்திரேட் முன்னிலையில் குற்றவாளிகளை அடையாளம் காட்டினார். அதையடுத்து இவ்வழக்கில், அடுத்தகட்ட நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள 4 பேர், புதுச்சேரி நீதிமன்றம் மற்றும் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமின் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


போக்சோ சட்டம் : 


16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர்.


18 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காக இந்த போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம் குறித்த தகவல்கள் பின்வருமாறு:



  • Penetrative sexual Assault - பலவந்தமான பாலியல் வன்கொடுமை செய்தல்

  • Aggravated penetrative sexual assault - தீவிரமான பாலியல் தாக்குதல்

  • Sexual Assault - பாலியல் தொல்லை

  • Aggravated Sexual Assault - எல்லைமீறிய பாலியல் தொல்லை

  • Sexual Harassment - பாலியல் தொந்தரவு

  • Taking pornographic pictures of children - குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்தல்


இந்த ஆறுவகை பாலியல் குற்றங்களும் இந்த போக்சோ சட்டத்தின் கீழ் வருகின்றனர்.



  • 18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை

  • இதே குற்றத்தை பெற்றோர், பாதுகாவலர் செய்தால் 10 ஆண்டுகள் சிறை

  • 12 வயதுக்கு கீழான குழந்தைகளை வன்கொடுமை செய்தால் - மரண தண்டனை (இந்த சட்டம் 2018ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது)