தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில்லில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் வெளிநாட்டினர் பாரம்பரிய உடையணிந்து மஞ்சு விரட்டை கண்டுகளித்தனர். புதுச்சேரியில் முக்கிய சுற்றுலா தலங்களான மணக்குள விநாயகர் கோவில், கடற்கரை, தாவரவியல் பூங்கா, சுண்ணாம்பாறு படகு குழாம், உசுட்டேரி உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் தங்களின் குடும்பத்தினருடன் காணும் பொங்கலை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இதேபோல் சர்வதேச நகரமான ஆரோவில் குயிலாப்பாளையத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் மஞ்சு விரட்டு விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.




குயிலாப்பாளைம் மாரியம்மன் கோயில் திடலில் நடைபெற்ற மஞ்சு விரட்டில், ஊர்மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள மாடுகள் மற்றும் கன்று குட்டிகளுக்கு கொம்புகளில் வர்ணம் பூசி, பூ, பலூன்களை கட்டியும், ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்களின் படங்களை கொண்டு அலங்கரித்த மாடுகளை அம்மன் கோவில் திடலுக்கு அழைத்து வந்தனர். அதன் பின்னர் அம்மன் கோவிலின் முன்பு மாடுகளுக்கு சிறப்புப் பூஜை நடத்தப்பட்டு, மஞ்சுவிரட்டு நடைபெற்றது. அப்போது ஏராளமான சிறுவர்களும், இளைஞர்களும் மாடுகளை உற்சாகத்துடன் விரட்டிச் சென்றனர்.




மஞ்சுவிரட்டை பார்ப்பதற்கு அருகில் உள்ள கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளூர் மக்களும், 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் தமிழர்களின் பாராம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து மஞ்சு விரட்டை கண்டு ரசித்தனர். மேலும் மஞ்சு விரட்டின்போது நேர்த்திகடனாக மணிலா,எலுமிச்சைப் பழங்களும், வாழைப் பழங்களும் வீசப்பட்டன. இதனை மக்கள் போட்டி, போட்டுக் கொண்டு எடுத்தனர். இப்பழங்களை அம்மன் வீசுவதாகவும், இதனை எடுத்துச் சென்றால் நல்லது நடக்கும் என்பதும் மக்களின் நம்பிக்கையாகும்.