விழுப்புரம் : பொங்கல் பண்டிகைக்கு தொடர்விடுமுறை விடப்பட்டதால் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு அதிகமானோர் சென்றதால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகனங்கள் நின்று அணிவகுத்து சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.




 பொங்கல் பண்டிகை வருகின்ற  14ஆம் தேதி முதல் வரும் புதன் கிழமை 17ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு அலுவலக பணியாளர்களுக்கும் 13 ஆம் முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறை என்பதாலும் குடும்பத்தினருடன் சொந்த ஊர்களில் பண்டிகையை கொண்டாட சென்னையிலிருந்து ஏராளமானோர் கார்கள் பேருந்துகள் ரயில் மூலமாக பயணித்து செல்கின்றனர்.




தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தினசரி இயக்கப்படும் 2,100 அரசு விரைவு பேருந்துகளுடன் 4,706 சிறப்பு பேருந்துகளும் சேர்த்து 3 நாட்களுக்கு மொத்தம் 11,006 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. இதேபோல், திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய ஊர்களில் இருந்தும் பிற இடங்களுக்கு 8,478 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த நிலையில் அரசு பேருந்துகளில் செல்ல தமிழ்நாடு முழுவதும் 1.25 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல 86,000 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இதன் காரணமாக முக்கிய வழித்தடங்களில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக செல்கின்றன. குறிப்பாக புதியதாக திறக்கப்பட்ட கிளம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களில் அதிக அளவில் மக்கள் கூடியுள்ளனர். தங்களது சொந்த ஊர்களான குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர்.




இந்நிலையில் சென்னையிலிருந்து அதிகமானோர் தென்மாவட்டங்களான, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு கார்களிலும் பேருந்துகளிலும் பயணித்து செல்வதால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகனங்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நின்று அணிவகுத்து சென்றன. அதிகமான வாகன வருகையால் சுங்கச்சாவடியில் அனைத்து வழிகளும் திறக்கப்பட்ட போதும் அதிகமான வாகனங்கள் வருகையால் சுங்கச்சாவடியை கடப்பதில் சிரம்மம் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றன. வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து போக்குவரத்து போலீசார் சுங்கச்சாவடி ஊழியர்கள் போக்குவரத்தினை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.