மின்துறை ஊழியர்கள் போராட்டத்தையொட்டி பாதுகாப்பு பணிக்காக புதுவைக்கு துணை ராணுவத்தினர் வந்துள்ளனர். மின்சாதனங்களை சேதப்படுத்திய மின் ஊழியர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


தனியார்மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் கடந்த 28-ந் தேதி முதல் காலைவரையற்ற வேலைநிறுத்தம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஒட்டுமொத்தமாக மின்துறை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இருப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 5-வது நாளாக இன்று போராட்டத்தில் மின்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏற்படும் மின் வினியோக பாதிப்புகள் ஒப்பந்த ஊழியர்களை கொண்டு சரிசெய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவன என்ஜினீயர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.  


 






மின் வயர்களை துண்டித்தும், பியஸ் கேரியர்களை பிடுங்கியும் செயற்கையாக மின் வெட்டு செய்வதை தடுக்கும் வகையில் மரப்பாலம், துத்திப்பட்டு, தொண்டமாநத்தம், வெங்கட்டாநகர், பாகூர், வில்லியனூர் ஆகிய துணை மின்நிலையங்களில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செயற்கை மின் தடையில் ஈடுபட்டவர்களை கண்டறிய அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மரப்பாலம் துணை மின்நிலையத்துக்குள் புகுந்து ஒப்பந்த ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து மின்சாதன பொருட்களை் சேதப்படுத்திய சுப்பிரமணி, செந்தில், செல்வம், ரவி ஆகிய மின்துறை ஊழியர்கள் மீது முதலியார்பேட்டை போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மின் வினியோக பிரச்சினையால் சாலைகளை மறித்து போராட்டங்களில் ஈடுபடுவதை தடுக்கவும், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் பாதுகாக்கவும் துணை ராணுவ படை வரவழைக்கப்பட்டது. அதன்படி சென்னையில் இருந்து புதுவைக்கு 2 கம்பெனி படையினர் வந்துள்ளனர். நகர பகுதியில் நேற்று மாலை கொடி அணிவகுப்பு நடத்தினர். இதன்பின் அனைத்து துணை மின் நிலையங்களிலும் பாதுகாப்பு பணியில் துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம்...


மின்துறை ஊழியர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்தும் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வராததால் அரசு கொள்கை முடிவாக எடுக்கப்பட்டு மின் துறை தனியார் மாயமாக அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது.  ஆனால் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிற ஊழியர்கள் இன்று பாகூர், வில்லியனூர், தொண்டமாநத்தம், உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் அத்துமீறி நுழைந்து மின்சாரத்தை துண்டித்ததோடு பீஸ் கேரியர்களையும் கையோடு கொண்டு சென்று உள்ளார்கள் இது சம்பந்தமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் உடனடியாக அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.


மேலும் போராட்டம் நடத்தும் ஊழியர்கள் மக்களுக்கு இடையூறு செய்தால் அரசு இதை வேடிக்கை பார்க்காது, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் மின் நிலையங்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக புதுச்சேரி போலீசார் மின் நிலையங்களில் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்படுவார்கள், அதே போன்று தொடர்ந்து மின் தடை இல்லாமல் மின்சாரம் வழங்குவதற்கு மத்திய அரசு பவர் கிரிட் நிறுவனத்தைச் சேர்ந்த 24 ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள், அதேபோன்று மின் நிலையங்களுக்கு பாதுகாப்பு அளிக்க இரண்டு துணை ராணுவ கம்பெனிகளும் புதுச்சேரிக்கு வரவழைக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிவித்தார். மேலும் பொது மக்களுக்கு இடையூறு செய்யும் போராட்டக் காரர்களுக்கு சமூக அமைப்புகளோ சட்டமன்ற உறுப்பினர்களோ ஆதரவு தரக்கூடாது என்று கேட்டுக் கொண்ட அவர் அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.