வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்கள் உடனான ஆய்வு கூட்டம் கடலூர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலரும், கடலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அன்சுல் மிஸ்ரா தலைமை தாங்கினார். மாவட்ட மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் அன்சுல் மிஸ்ரா கூறுகையில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நீர் நிலைகளின் கொள்ளளவை தொடர்ந்து கண்காணித்து, அதற்கு ஏற்றார்போல் தண்ணீரை வெளியேற்ற வேண்டும்.

 



 

மாவட்டத்தில் மழைவெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய தாழ்வான பகுதிகள், மிக தாழ்வானவை என 278 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட அனைத்துத்துறை அதிகாரிகளும் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும் புயல் பாதுகாப்பு மையம், பல்நோக்கு மையம் மற்றும் தற்காலிக தங்குமிடம், பேரிடர் காலத்தில் பொதுமக்கள் தங்க வைக்கப்படவேண்டிய இடங்களில் குடிநீர், உணவு, கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

 

 

முகாம்களில் தங்க வைக்கப்படும் பொது மக்களுக்கு உணவு தயாரிக்க தேவையான அரிசி, பருப்பு, பால் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களை தயாராக வைத்திருக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் பணிபுரிய தயார் நிலையில் இருக்கவேண்டும். அவசர சேவை ஊர்திகளும், வெள்ளப்பாதிப்பு ஏற்படும் நிலையில் பொதுமக்களை பாதுகாத்து மீட்டு வருவதற்கு படகுகளையும், பொது மக்களை பாதுகாப்பு மையத்திற்கு அழைத்து செல்வதற்கு தேவையான வாகனங்களையும் தயார் நிலையில் வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

பின்னர் கண்காணிப்பு அலுவலர் அன்சுல் மிஸ்ரா, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் பேரிடர் தொடர்பான தகவல் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கடலூர் பேரிடர் கால வானொலி 107.8 பண்பலை அலைவரிசையில் உரையாற்றினார். அதனை தொடர்ந்து கண்காணிப்பு அலுவலர் அன்சுல் மிஸ்ரா, கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்கு சென்று, அங்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு உபகரணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 



 

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பணியில் மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்டத்தில் மழையால் அதிகளவில் பாதிக்கப்படக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்கள் ஏதாவது பாதிப்பு என்றால் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போது தான் அனைத்துத் துறையினரும் இணைந்து உடனடியாக பணியாற்ற முடியும். மேலும் அடிக்கடி இயற்கை சீற்றத்திற்கு உள்ளாகி வரும் கடலூர் மாவட்டத்திற்கு தேவையான நிரந்த தீர்வு குறித்து அனைத்துத்துறையினருடன் கலந்தாலோசித்து ஒரு தீர்வு காணப்படும். தற்போது மாவட்டத்தில் தேவையான அளவு மணல் மூட்டைகளும், மரம் அறுக்கும் எந்திரங்களும், மின்மோட்டார் உள்ளிட்டவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றார்.

 

தகவல் தொடர்பு எண்கள்:

 

1077 (டோல்ஃப்ரீ) கட்டுப்பாட்டு அறை - 04142-233933

 04142-221383

 04142-221113