விழுப்புரத்தில் செயல்பட்டு வரும் பிரபல மகாலட்சுமி வணிக வளாகத்திற்கு மர்ம நபர் இரண்டாவது முறையாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்ததையடுத்து வணிக வளாகத்திற்குள் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்ட நிலையில் மிரட்டல் விடுத்த நபரை கைது செய்தனர். 


விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் பிரபல தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான வணிக வளாகம் இயங்கி வருகிறது. இந்த வணிக வளாகத்தில் தரைதளத்தில் மளிகை பொருட்கள் விற்பனையும், மேல் தளத்தில் துணிக்கடைகள், திரையரங்குகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வணிக வளாகத்தில் உள்ள தொலைபேசி எண்ணுக்கு 13ம் தேதி மதியம் 1.15 மணியளவில் அழைப்பு ஒன்று வந்தது. அந்த அழைப்பை அங்குள்ள கிளை மேலாளர் ஒருவர் எடுத்து பேசியுள்ளார். அப்போது எதிர்முனையில் பேசிய மர்ம நபர் ஒருவர், உங்கள் நிறுவன உரிமையாளரிடம் பேச வேண்டும் என்றும் அவரிடம் தொலைபேசியை கொடுக்குமாறும் கூறியுள்ளார்.




அதற்கு அந்நிறுவன கிளை மேலாளர், தற்போது உரிமையாளர் இங்கு இல்லை என்று கூறவே, உங்கள் நிறுவனங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், சிறிது நேரத்தில் அது வெடிக்கும் என்று கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக இதுபற்றி நிறுவன உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசினார். அவர் இதுகுறித்து விழுப்புரம் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அந்த வணிக வளாகத்திற்கு விரைந்து சென்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் வணிக வளாகத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீஸ் மோப்ப நாய் ராணி மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் வெடிகுண்டு நிபுணர்களும் அங்கு விரைந்தனர்.




வணிக வளாகத்தில் உள்ள 4 தளங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் நிறுவன ஊழியர்கள் இருந்தனர். இதனால் ஒவ்வொரு தளத்திலும் உள்ள பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற அங்கிருந்த பொதுமக்கள், ஊழியர்களிடம் வெடிகுண்டு மிரட்டல் வந்த தகவலை தெரிவித்து அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். பின்னர், வெடிகுண்டு நிபுணர்களும் தனித்தனி குழுக்களாக பிரிந்து சென்று மோப்ப நாய் உதவியுடனும், மெட்டல் டிடெக்டர் கருவியின் உதவியுடனும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த சோதனை மாலை 6 மணியளவில் முடிவடைந்தது. 


இந்நிலையில் நேற்று மீண்டும் வணிக வளாகத்திற்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் வெடிகுண்டி வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தார். அந்த மிரட்டலின் பேரில் போலீசார் மோப்ப நாய் வரவழைத்து வணிக வளாகத்திற்குள் இருந்தவர்களை வெளியே அனுப்பிவிட்டு சோதனை மேற்கொண்டனர். சோதனையில் வெடிகுண்டு இல்லை என்பது உறுதியாகியதை தொடர்ந்து மீண்டும் மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரனை செய்து வந்தனர், 


முதற்கட்டமாக வணிக வளாக தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்ட செல்போனின் அழைப்பு விவர பதிவினை (CDR) ஆய்வு செய்தபோது அது விழுப்புரம் அருகே உள்ள திருப்பச்சாவடிமேடு பகுதியை சேர்ந்தது என தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து லொகேஷனை வைத்து போலீசார் அங்கு தேடிய தனிப்படை போலீசார் திருப்பச்சாவடிமேடு பகுதியில் பதுங்கி இருந்த பிரபாகரன் என்கின்ற இளைஞரை கைது செய்தனர்.


முதற்கட்ட விசாரணையில் பிரபாகரன் பெரியசெவலை பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ஷாப்பிங் மாலில் உள்ள துணிக்கடையில் துணி எடுக்க வந்தபோது தனது பணம் 7000 ரூபாயை அங்கு தொலைத்ததாகவும் இதுகுறித்து நிர்வாகத்தினரிடம் முறையிட்டபோது முறையான பதில் அளிக்காமல் வேறு எங்கையே தொலைத்துவிட்டு இங்கு வந்து தொலைத்தாக கூறுகிறார் என தெரிவித்து அலட்சியபடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன் வணைக வளாகத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் இளைஞரை கைது செய்தனர். இரண்டு முறை ஷாப்பிங் மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் விழுப்புரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடதக்கது.