விழுப்புரம்: கள்ளக்குறிச்சியில் சாராயத்தால் உயிரிழந்த சோகம் மறையாத நிலையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் சாராய பாக்கெட் உடன் சுற்றி வந்து குடித்த சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டில் கடந்த ஆண்டு மே மாதம் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்ததில்  14 பேரும், செங்கல்பட்டில் 8 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகும் கள்ளச்சாராயம் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு அஜாக்கிரதையாகவும் மெத்தனமாகவும் செயல்பட்டதன் விளைவு கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவத்தில் இதுவரை 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.


இந்த நிலையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றியுள்ளது. இந்நிலையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் சாராய பாக்கெட்டுடன் ஒருவர் அனைத்து பயணிகளையும் அச்சுறுத்தும் வகையில் பேசிக்கொண்டு சுற்றி வந்தார். பின்னர் பேருந்து நிறுத்தும் இடத்தில் சாவகாசமாக அமர்ந்து சாராய பாக்கெட்டை கிழித்து தண்ணீர் கலந்து குடித்தார். இதனை அங்கிருந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் வேதனையுடன் பார்த்தனர்.


தமிழக அரசு கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த நிலையிலும் சாராய பாக்கெட்டுடன் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் ஒருவர் சுற்றி திரிந்த சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்ட காவல் துறையினர் பெயரளவில் மட்டுமே சோதனை மேற்கொள்கின்றனர். இதனால் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.