புதுச்சேரி: உங்களுக்கு ஏதாவது விளம்பரம் வேண்டுமென்றால் தமிழ்நாட்டோட வைத்துக் கொள்ளுங்கள் புதுச்சேரியில் வேண்டாம் என்றும்,  விழுப்புரம் எம்பிக்கு புதுச்சேரியில் என்ன வேலை எனவும் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன். 



இந்திய அஞ்சல் துறை சார்பில் அக்கார்டு ஓட்டலில் நடைபெற்ற, கவினைஞர்கள் ஏற்றுமதியாளர்
களுக்கான அறிமுகக் கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புதுச்சேரியில் அரசு துறையில் பணிபுரியும் பெண்களுக்கான இரண்டு மணி நேர சலுகை திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. கடுமையாக உழைக்கும் பெண்களுக்கு புதுச்சேரி அரசு அளிக்கும் ஒரு சின்ன பரிசு. இந்த திட்டத்தை பல பேர் விமர்சனம் செய்கிறார்கள். ஒருபோதும் இந்த திட்டத்தை திரும்ப பெற முடியாது. ஜிப்மர் மருத்துவமனையில் புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு மக்களுக்கு முழு சேவையை ஆற்றி வருகிறது. பல்வேறு வெளி மாநிலங்களில் பெறக்கூடிய உயர்நிலை சிகிச்சையை தற்போது ஜிப்மரில் பெற்று வருகிறோம்.


சுமார் 60% பரிசோதனைகள் இங்கு செய்யப்படுகிறது மும்பை, சென்னை, பெங்களூர் சென்று வாங்கக்கூடிய பரிசோதனை முடிவுகளை கூட தற்போது நாம் நடந்து செல்லும் தூரத்தில் பெற்றுக் கொள்ள முடிகிறது. இதையெல்லாம் அவர்கள் பாராட்ட மாட்டார்கள். அவர்கள் பாராட்ட தேவையில்லை இருந்தாலும் ஜிப்மரை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்து நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்றார்.


விழுப்புரம் எம்பிக்கு புதுச்சேரியில் என்ன வேலை என்று ஆவேசமடைந்த தமிழிசை இவர்களுக்கு விளம்பரம் தேவை என்றால் தமிழ்நாட்டோடு வைத்துக் கொள்ளட்டும் புதுச்சேரியில் தேவையில்லை என்று பொங்கி எழுந்த அவர் போராட்டம் நடத்தும் அளவிற்கு ஜிப்மர் செயல்படவில்லை ஜிப்மர் நன்றாகவே செயல்படுகிறது என்று குறிப்பிட்டார்.


ஜிப்மரில் ஏழை எளிய மக்களிடம் சிகிச்சைக்காக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகிறார்கள் அது எந்த விதத்திலும் உண்மையல்ல... அப்படி ஏழை எளிய மக்களிடம் கட்டணத்தை ஜிப்மர் வசூலித்து இருந்தால் அந்த கட்டணத்தை நானே திரும்ப அளித்து விடுகிறேன் என்று குறிப்பிட்ட அவர், ஜிப்மரின் செயல்பாடுகள் குறித்து ஒவ்வொரு நாளும் இயக்குனரை தொடர்பு கொண்டு தான் பேசி வருவதாகவும் குறிப்பிட்டார். புதுச்சேரியில் ஏழை எளிய மக்களிடம் கட்டண வசூலிக்கும் ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் விழுப்புரம் எம்பி ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.