மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு 


விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு உளுந்துார்பேட்டையில் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆனி ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தேசிய துணைத் தலைவர் உ.வாசுகி மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர்.


மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில்...,


விசிக வரலாற்றில் ஒரு மைல்கல் இந்த மாநாடு. அகில இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் மாநாடு. லட்சக்கணக்கான மகளிர் திரண்டு வந்துள்ளனர். மழை வரும் என் பயந்தேன். இயற்கை நம் பக்கம் தான். ஒற்றை கோரிக்கை மதுவிலக்கு என்பது தான். இது புதிய கோரிக்கை அல்ல. புத்தர் காலத்தில் இருந்து இந்த கொள்கை பேசப்பட்டு வருகிறது. திடீர் என திருமாவளவன் மது ஒழிப்பு குறித்து பேசுகிறார் என பேசுகிறார்கள். நாங்கள் சாதி, மத பெருமை பற்றி பேசுபவர்கள் அல்ல. புத்தர் பெருமை பேசுபவர்கள்.


காந்தி, ராஜாஜி கட்அவுட் ஏன்? திருமா விளக்கம் 


இந்த மாநாட்டில் கவனிக்க வேண்டியது ஒன்று. இதுவரை நாம் பயன்படுத்தாத உருவம் ஒருவர் காந்தி, மற்றொருவர் ராஜாஜி. மது வேண்டாம் என சொல்லும் அனைத்து தலைவர்களின் வாழ்த்து நமக்கு தேவை. அரசியலுக்காக இதனை பயன்படுத்தவில்லை. காந்தி கொள்கையில் பலவற்றில் முரண்பாடு உண்டு, ஆனால் உடன்பாடுள்ள இரண்டு கொள்கை மது விலக்கு, மதச்சார்பின்மை.


நான் தமிழ்நாட்டில் மதுவிலக்கு வேண்டாம் என கூறிவிட்டார் என சில அரைவேக்காடுகள் ஊடகங்களில் சிலர் பேச தொடங்கிவிட்டார்கள்


மதுவிகக்கு இந்தியா முழுமைக்கும் வேண்டும். எந்த மகானும் மதுவை ஆதரித்ததில்லை. மதுவை ஏற்காகத ஒரு மார்க்கம் உண்டென்றால் அது இஸ்லாம். திருவள்ளுவர் கல்லுன்னாமை எனும் அதிகாரத்தை எழுதியுள்ளார். அரசியமைப்பு சட்டம் 47 மது ஒழிப்பு தொடர்பாக கூறுகிறது. இதனை சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் பேசினேன். ஆனால் நான் தமிழ்நாட்டில் மதுவிலக்கு வேண்டாம் என கூறிவிட்டார் என சில அரைவேக்காடுகள் ஊடகங்களில் சிலர் பேச தொடங்கிவிட்டார்கள். இந்த நாட்டை சாதி, மத வெறியர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.


மது பழக்கத்திற்கு ஆளானால் மனித வளம் அழிந்துவிடும். இந்த மாநாட்டில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம், தேர்தல் அரசியல், கூட்டணி அரசியல் கணக்குகள் பேச வேண்டாம் என கூறினேன். ஆனால் திருமாவளவன் அதிமுகவுக்கு அழைப்பு விடுகிறார் என பேசினார்கள். இந்த மாநாட்டின் காரணமாக போதை பொருளை ஒழிக்க முடியுமா, இல்லையா என விவாதம் செய்திருக்க வேண்டும்.


மாநாட்டின் நோக்கத்தை முழுவதுமாக மாற்றிவிட்டனர்


2026 சட்டமன்ற தேர்தலுக்கு 18 மாதங்கள் உள்ளன. ஆனால் 2026 தேர்தலுக்கு இப்போதே அடிபோடுகிறோம் என இந்த மாநாட்டின் நோக்கத்தை முழுவதுமாக மாற்றிவிட்டனர். இந்தியா முழுவதும் மதுக்கடைகள் வேண்டுமா, வேண்டாமா. அப்படி கோரிக்கை எழுப்புவது என் கடமை. சாதி, மத பிரச்சினை என்பது தேசிய பார்வை வேண்டும் அப்படித்தான் மது ஒழிப்பும் மதுவும்.


அதானி விமானநிலையம், துறைமுகங்களில் கோடிக்கணக்கான ரூபாய் அளவில் போதை பொருள் கைப்பற்றப்பட்டது. இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினோம், அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. இன்றைக்கு நம் குக்கிராமங்களிலும் போதை பொருள் கிடைக்கிறது.


பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் போதை பொருள் பழக்கம்


பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் போதை பொருள் பழக்கம் உள்ளது. இந்த மாநாட்டிற்கு திமுகவை எப்படி அழைக்கலாம், திமுக அரசு தானே நடக்கிறது. திமுக அரசு தானே கடைகளை நடத்துகிறது என பேசுகிறார்கள். அப்படி இருக்கும் சூழலில் திமுக கலந்துக்கொள்வது விசிகாவின் வெற்றி. மது ஒழிப்பில் திமுகவுக்கும் உடன்பாடு உண்டு. மதுவிலகு குறித்து மோடியிடம் ஏன் கேட்கிறார் என கேட்கிறார்கள். தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடவேண்டும் என்பதும், தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை கொண்டு வர வேண்டும் என்பது தான் நம் கோரிக்கை.


1974ல் கலைஞர் மதுக்கடைகளை மூடினார். அதன் பிறகு மதுக்கடைகளை திறந்தது யார், டாஸ்மாக்கை உருவாக்கியது யார்?. இதனை யாரும் பேசுவதில்லை. எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் என்ன தொடர்பு. ஜெயலலிதா ஆட்சியில் அரசே நடத்தலாம் என சட்டம் கொண்டு வந்தார்.


மதுக்கடையை மூட வேண்டும் என்ற எண்ணம் தான் எனக்கும் உள்ளது


மதுக்கடையை மூட வேண்டும் என்ற எண்ணம் தான் எனக்கும் உள்ளது என தனிப்பட்ட முறையில் ஸ்டாலின் என்னிடம் கூறினார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக மதுக்கடைகளை மூடினால் 2026ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும். மதுக்கடை மூடினால் விசிகாவின் வெற்றி, மக்களின் வெற்றி.


முன்வைத்த காலை பின் வைக்க மாட்டேன்


தேசிய மதுக்கொள்கையை உருவாக்க சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என பேசினேன். தேர்தல் அரசியலே வேண்டாம் என சமூக இயக்கமாக நடத்துவதற்கு தயாராவனே தவிர, முன்வைத்த காலை பின் வைக்க மாட்டேன். என் கைகள் சுத்தமாக உள்ளன.


அக்கா தமிழிசை அவர்களே உங்களுக்கு குடிப்பழக்கம் இருக்காது என நம்புகிறேன்


காந்தியை அவமதித்துவிட்டார் என தமிழிசை பேசுகிறார். எனக்கு குடிப்பழக்கம் இருக்கும் என்ற தொனியில் அக்கா தமிழிசை பேசுகிறார். அக்கா தமிழிசை அவர்களே உங்களுக்கு குடிப்பழக்கம் இருக்காது என நம்புகிறேன். உங்களை போலத்தான் நானும் குடிப்பழக்கம் இல்லாதவன். காங்கிரஸ் கட்சியோடு கூட்டணியில் உள்ளோம். என்னை குறித்து யார் என்ன சொன்னாலும் அதனைப்பற்றி எனக்கு கவலை இல்லை. மதச்சார்பற்ற நாடாக இந்தியா இருக்க காந்தி விரும்பியதால் தான் நாதுராம் கோட்சே காந்தியை சுட்டுக்கொன்றான். ஆர்.எஸ்.எஸ் காரன் சுட்டான். காரணம் மதச்சார்பின்மை என்பதுதான். அதனால் தான் காந்தி பிறந்தநாளில் இந்த மாநாட்டை நடத்துகிறோம்.


ராஜாஜி மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கவில்லை


ராஜாஜிக்கு ஏன் பேனர் வைத்தோம். ராஜாஜி ஒரு பார்ப்பன சமூகத்தை சேர்ந்தவர். 1937ல் சேலத்தின் நகராட்சி தலைவராக இருந்தபோது ராஜாஜி மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கவில்லை. அதனால் தான் மாநாட்டில் பேனர் வைத்துள்ளோம். முதல்வர் ஸ்டாலினுக்கு இரு கோரிக்கை எங்கள் தீர்மானங்களை கோரிக்கையாக ஏற்று அப்படியே நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். கூட்டணி அரசியல் என்பது வேறு.


தேசிய அளவில் மதுவிலக்கை கொண்டுவாருங்கள்


ஸ்ரீமன் நாராயணன் கமிட்டியின் பரிந்துரையைதான் நாங்கள் கோரிக்கையாக வைக்கிறோம். மோடியோ அதனை நடைமுறைப்படுத்துங்கள். இந்துக்கள் தான் அதிகம் குடிக்கிறார்கள். இஸ்லாமியர்களில் 99 சதவீதம் பேர் குடிப்பதில்லை. ஆனால் இந்துக்களில் எத்தனை பேர் குடிக்கிறார்கள். இந்து சமூகத்தை பாதுகாக்க மோடி, அமித்ஷாவுக்கு அக்கறை இருக்கிறதா இல்லையா. தேசிய அளவில் மதுவிலக்கை கொண்டுவாருங்கள். தேசிய கல்வி கொள்கையை ஏற்க மறுப்பதும், தேசிய மதுக்கொள்கையை கொண்டு வர சொல்வதல் வேறுபாடு புரியவில்லை. மோடி அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன் இந்தியா முழுவதும் மதுவிலக்கை கொண்டுவர வேண்டும் என தெரிவித்தார்.