விழுப்புரம்: புதியதாக கட்சி ஆரம்பித்திருக்கும் விஜய் கட்சி மாநாட்டிற்கு 33 நிபந்தனைகள் கொடுக்கப்பட்டது போல் 31 ஆண்டுகாலம் ஆட்சி கட்டிலில் இருந்த அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்த மிக மோசமான நிபந்தனைகள் காவல் துறையில் மூலம் கொடுக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

 

விழுப்புரம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், சாலைகள் சீரமைக்கப்படாததை கண்டித்தும் பாதாள சாக்கடை திட்டத்தை சரியாக நடமுறைபடுத்த வலியுறுத்தி அதிமுக சார்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் முன்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம், காவல்துறை திமுகவின் ஊதுகோலாக இருக்க கூடாது என்றும் தமிழகத்தில் போதை பொருட்கள் பழக்கம் அதிகரித்துள்ளதாகவும், பெண்கள்  கூட்டு பலாத்காரம் செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.

 

பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தாமல் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், புதியதாக கட்சி ஆரம்பித்திருக்கும் விஜய் கட்சி மாநாட்டிற்கு 33 நிபந்தனைகள் கொடுக்கப்பட்டது போல் 31 ஆண்டுகாலம் ஆட்சி கட்டிலில் இருந்த அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்த மிகமோசமான நிபந்தனைகள் கொடுப்பது  தவறான போக்கு கண்டிக்கதக்கது.

 

ஆட்சி மாற்றம் ஏற்படும் ஆனால் நிர்வகிக்கும் காவல் துறை தவறான முன்னுதாரனத்தை ஏற்படுத்துவதாகவும், 200 பேருக்கு மேல் கலந்து கொள்ள கூடாது என உத்தரவிடுவதாக தெரிவித்தார். திமுக ஆட்சியில் புது புது நோய்கள் வருகிறது, அப்படி நோய் வருபவர்கள் அரசு மருத்துவமனைக்கு சென்றால் மருத்துவர் இல்லை, மருந்து இல்லை, மாத்திரைகள் இல்லை சாக்கடை நீர் சாலைகளில் ஆறு போல் வழிந்தோடுகிறது. இது விழுப்புரம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இந்த பிரச்சனை உள்ளது.

 

கஞ்சா விற்பனைக்கும், சாராய விற்பனைக்கும் ஆதரவாக தெருவிளக்குகள் எரியாமல் விழுப்புரம் நகரம் இருளில் மூழ்கியுள்ளதாகவும், விழுப்புரத்தில் இடுகாட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுமென டெண்டர் விடப்பட்டுள்ள அதிகாரிகள் மீது ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா என கேள்வி எழுப்பினார். சாலைகள் சரியில்லாத நிலைதான் திண்டிவனம், விழுப்புரத்தில் இருந்து வருகிறது. விழுப்புரத்தில் சுகாதார சீர்கேட்டிற்கு காரணம் கோலியனூரான் வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யபட்டுள்ளதால் ஏற்படுவதாகவும், எங்கு பார்த்தாலும் கொள்ளை, வழிப்பறி, கஞ்சா, போதையின் நகரமாக விழுப்புரம் மாறி உள்ளதாக தெரிவித்தார்.