கடலூரில் பணி இடமாற்றத்திற்கு மறுப்பு தெரிவித்து காவல் நிலையத்திலேயே தூக்க மாத்திரையை சாப்பிட்டு பெண் உதவி ஆய்வாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக சுகன்யா (30) என்பவர் பணியாற்றி வந்தார். சுகன்யா நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் சிறந்த அதிகாரியாக செயல்பட்டு வந்ததுடன் பல்வேறு குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை தயவு தாட்சணையின்றி கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் சுகன்யாவிற்கு திடீரென விழுப்புரம் மாவட்டம் மயிலம் காவல் பயிற்சி பள்ளிக்கு பணியிட மாற்றம் வந்துள்ளது. இதற்கான காரணத்தை உயரதிகாரியிடம் கேட்டபோது எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை என தெரிய கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த உதவி ஆய்வாளர் சுகன்யா காவல் நிலையத்திற்கு வந்த நிலையில் காவல் நிலையத்திலேயே அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.



இதனை அறிந்த சக போலீசார் அவரை மீட்டு புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக சிகிச்சையில் உள்ள போதே தகவல் தெரிவித்துள்ள  உதவி ஆய்வாளர் சுகன்யா, குட்கா,லாட்டரி,கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவைகளில் நேர்மையான நடவடிக்கை மேற்கொண்டேன்..தனது நடவடிக்கைகள் பணியிட மாற்றம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவித்தும் பதில் தெரிவிக்காத நிலையில் தொடர்நது அதிகாரிகள் தன்னை பணியிட மாற்றம் செய்த இடத்திற்கு செல்ல வற்புறுத்தியதாகவும் தெரிவித்தார்.

 

மேலும் நேர்மையாக நடந்தால் பணிமாற்ற நடவடிக்கையா? என்னைப்போல் பெண் அதிகாரிகளுக்கோ, காவலர்களுக்கோ இனி இதுபோல் நடைபெறக்கூடாது என்று எண்ணியே  தற்கொலை முயற்சியில் ஈடுபட்டேன் என உதவி ஆய்வாளர் சுகன்யா தெரிவித்தார். காவல் நிலையத்திலேயே பெண் காவல் உதவி ஆய்வாளர் தற்கொலைக்கு முயற்சி சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.