கடலூர் அருகே திருமாணிக்குழி டி.புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி. இவருடைய மனைவி ராஜலட்சுமி (54). இவர் தனது ஊரில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்த கடைக்கு தேவையான மளிகைபொருட்கள் வாங்குவதற்காக நேற்று தனது மகன் வெங்கடேசன் (26) என்பவருடன் கடலூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்தார். அவர்கள் கூத்தப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே வந்த போது, பின்னால் மீன் ஏற்றி வந்த லாரி அவர்கள் சென்ற மொபட்டில் மோதியது.

 



 

இந்த விபத்தில் 2 பேரும் ரோட்டில் வலது, இடது புறமாக தனித் தனியாக கீழே விழுந்தனர். இதையடுத்து வெங்கடேசன் லேசான காயத்துடன் சுதாரித்து எழுவதற்குள், அவர் கண் எதிரே ராஜலட்சுமி மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் ராஜலட்சுமி சம்பவ இடத்திலேய தலை நசுங்கி உயிரிழந்தார். இதை பார்த்த வெங்கடேசன் கதறி அழுதார். பின்னர் இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இறந்து கிடந்த ராஜலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி அவரது மகன் வெங்கடேசன் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். 

 





 

அதன் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெங்கடேசனுக்கு இன்னும் 10 நாட்களில் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில், அவரது தாய் அவரது கண் முன்னே துடி, துடித்து பலியான சம்பவம் அவரை மட்டுமின்றி அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.



 

 

நேற்று பகல் 12 மணி அளவில் விருத்தாசலத்தில் இருந்து ஒரு தனியார் பேருந்து கடலூர் நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. பேருந்தை விருத்தாசலத்தை சேர்ந்த செந்தில்நாதன் (40) என்பவர் ஓட்டி வந்தார். இதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இந்தநிலையில் கடலூர் முதுநகர் அருகே பெரிய பிள்ளையார் மேடு என்ற இடத்தில் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது, செந்தில்நாதனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 



இதில் அவர் சாதுர்யமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்த முற்பட்டார். ஆனால் அதற்குள் அவர் மயங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பேருந்து சாலையின் வலதுபுறம் உள்ள தடுப்பு கட்டைகள் மீது மோதி, அருகில் இருந்த இரண்டு மின் கம்பங்கள் மீது மோதியபடி நின்றது.அப்போது அந்த பகுதியில் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இதனால், பேருந்துசில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் எவ்வித காயமின்றி தப்பினார். இதற்கிடையே செந்தில்நாதனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் கடலூர் முதுநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.