கடலூர், நெல்லிக்குப்பம் அடுத்த விஸ்வநாதபுரம் தென்பெண்ணையாறு குறுக்கே தமிழக அரசு 28 கோடி 70 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து கடந்த பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி புதிய தடுப்பணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த தடுப்பணை நீளம் 385 மீட்டர், 1.50 மீட்டர் உயரம் மற்றும் சுவர், மேற்புறம், கீழ்ப்புற தளம், 8 கதவணை தூண்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகள் முடிவடைந்து பயன்பாட்டில் உள்ளன. மேலும் இந்த தடுப்பணை மூலம்‌ 14.645 மில்லியன் கன அடி நீரை சேமிப்பதன் மூலம் 4 க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு 98 ஆழ்துளை கிணறுக்கு தண்ணீர் கிடைப்பதோடு, 2206 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

 



 

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை யொட்டி கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக விடிய விடிய கனமழை பெய்து வந்ததால் தென்பெண்ணையாற்றில் தற்போது தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் நெல்லிக்குப்பம் அடுத்த விஸ்வநாதபுரம் பகுதியில் கடந்த 8 மாதத்திற்கு முன்பு கட்டப்பட்ட தடுப்பணை இருபுறமும், புதிதாக கட்டப்பட்ட கரைகள் சரியாக மண் அனைக்காத காரணத்தினால் தற்போது மண் சரிவு ஏற்பட்டு உள்வாங்கி உள்ளது. மேலும் தென்பெண்ணை ஆற்றின் இருபுறமும் கரைகள் விரிசல் ஏற்பட்டு மண் சரிந்து உள்ளன. கடந்த சில தினங்களாக தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வந்த காரணத்தினால் புதிதாக கட்டப்பட்ட கரைகள் விரிசல் அடைந்து மண் சரிவு ஏற்பட்டுள்ள காரணத்தினால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 



 

அணையின் இருபுறமும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை, நெல், கரும்பு போன்றவற்றை விவசாயிகள் பெயரிடப்பட்டுள்ளனர். தற்போது வருங்காலங்களில் அதிக அளவில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில் தற்போது தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வழிந்தோடும் சமயத்தில் 8 மாதத்துக்கு முன்பு கட்டப்பட்ட தடுப்பணைகள் இருபுறமும் விரிசல் ஏற்பட்டு சிமெண்ட் கட்டைகள் மற்றும் நடைபாதைகள் சரிந்து விரிசல் உள்ள நிலையில் திடீரென்று அதிகளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கண்டிப்பாக கரைகள் உடைந்து நிலப்பகுதியில் தண்ணீர் உள்ளே புகுந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் பயிரிடப்பட்டுள்ள நெல், வாழை, கரும்பு போன்றவற்றை அழிந்து விவசாயிகள் வாழ்க்கை கேள்விக்குறியாகும். 

 



 

மேலும் சுமார் 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்பணை தரமானதாக கட்டப்பட்டு உள்ளதா? என தெரியவில்லை. மேலும் பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணை ஏற்கனவே உடைந்து தடுப்பணைகள் பயனற்று இருந்ததை அதிகாரிகள் அவசர அவசரமாக சீரமைத்த நிலை குறித்தும் அனைவரும் அறிந்ததாகும் அந்த நிலமை தங்கள் ஊருக்கும் வரக்கூடாது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணையை அதிகாரிகள் குழுக்கள் அமைத்து ஆய்வு செய்து உடனடியாக சீரமைப்பு பணியை தொடங்க வேண்டும். மேலும் கரையின் இருபுறமும் உள்ள கரைகள் மண் சரிந்து விரிசல் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக கரையை பலப்படுத்தும் பணியினை வெள்ளப் பெருக்கு அதிக அளவில் ஏற்படுவதற்கு முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.