கடலூர் மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று மேயர் சுந்தரி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தங்களது வார்டு பிரச்சினைகள் குறித்து  பேசினர். அப்போது குறிப்பாக 8 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் சுமதி என்பவர் தங்கள் வார்டு குறித்து கேள்வி எழுப்பிய போது அதற்கு மேயர் பதில் அளிப்பதற்கு முன்பாக மற்ற வார்டு உறுப்பினர்கள் பதில் அளித்ததால், கூட்டத்தில் மாறி மாறி பேசிய போது பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக இன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஒரு தரப்பாகவும், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் ஆதரவாளர்கள் ஒரு தரப்பாகவும் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

இந்த வாக்குவாதம் முடிவதற்கு முன்னதாகவே எம்.எல்.ஏ ஆதரவாளராக கூறப்படும் 11 மாவட்ட உறுப்பினர்கள் 43 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஃபாருகலி என்பவரை 42 வது வார்டு மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமியின் கணவர் செந்தில்குமார் என்பவர் மாநகராட்சி அலுவலகத்தில் தாக்கியதாகவும் மாமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி மாமன்ற கூட்டத்தில் மேயரின் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை நீண்ட நேரம் மேயர் சமாதானம் செய்தும் அவர்கள் மாமன்ற உறுப்பினரை தாக்கிய நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். பின்னர் மாமன்ற கூட்டம் முழுமையாக நிறைவு பெறாமல் கூட்டத்திலிருந்து மாநகராட்சி மேயர் வெளியேறினார். இதனை அடுத்து இரு தரப்பினரும் மாநகராட்சி அலுவலகத்திற்கு முன்பு தனித்தனியாக சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். குறிப்பாக வேளாண் துறை அமைச்சர் தரப்பினர் திமுக கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். அதேபோன்று சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் மேயருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திமுகவை சேர்ந்த ஆளுங்கட்சி கவுன்சிலர்களை சாலை மறையில் ஈடுபட்டதால் காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்ய முடியாமல் பரிதவித்து நின்றனர். மேலும் நீண்ட நேரம் சாலை மறியலால் சாலையில் நின்றிருந்த வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.