கடலூர் மாவட்டத்தை சுற்றி உள்ள 13 மாவட்டங்களில் ஐபி விசைப்படகு மூலம் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். அதேபோல் கடலூர் துறைமுகத்திலும் தொழில் செய்ய அனுமதி வழங்க வேண்டும், அரசு சார்பில் வழங்கப்படும் மானிய விலையில் தங்கு தடையின்றி வழங்க வேண்டும், மேலும் கரைமடி இறால் வலை தொழில் செய்ய அனுமதி வழங்கி விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் துறைமுகம் மீன்வளத் துறை அலுவலகம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மீனவர்கள், பெண்கள் என ஏராளமானோர் திரண்டு காலை முதல் அமர்ந்திருந்தனர். அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின் படி மீன் பிடித்தால் எந்த ஒரு மீனவரும் மீன் பிடிக்க முடியாது என தெரிவித்த அவர்கள் விசைப்படகுகளை வைத்திருந்தால் எந்த புண்ணியமும் இல்லை அதனை அரசிடமே ஒப்படைக்க போவதாகவும் தெரிவித்தனர். 

 



 

மேலும் மீன்வளத் துறை அலுவலகம் எதிரில் கண்டன கோஷங்களை எழுப்பிய அவர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்த முறை தங்களது படகுகளை ஒப்படைப்பதும் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்தனர். பின்னர் விசைப்படகு இழுவை வலையால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. தற்போது ஐந்து நாட்டிக்கல் மைல் தூரம் தொழில் செய்ய வேண்டும் என அரசு உத்தரவின் பேரில் மீன் பிடிக்க இயலாது. ஏனென்றால் விசைப்படகு இயந்திரம் 90 குதிரை திறன் கொண்டதாகும், ஆகையால் இழுவையில் சொல்லும்போது ஆமை வேகத்தை மிகக்குறைவான வேகத்தில் செல்லக்கூடும். மேலும் 40 எம்.எம் வலை பயன்படுத்துவதால் மீன்கள் சரியாக கிடைக்காமல் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது, என வேதனை தெரிவித்தனர்.

 



 

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறு தொழில் செய்யும் மீனவர்கள் கருப்புக் கொடி கட்டி மீன்வள துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு பின்னர் இழு வலை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தங்கள் படகுகளுக்கான உரிமங்களை மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்தநிலையில் ஐபி விசைப்படகு மீனவர்கள் இன்று படகுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கடலூர் மீனவ கிராமத்தில் தொடர்ந்து பரபரப்பு நீடித்து வருவதால் காவல் துறையினர் குவிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.