விழுப்புரம்: மரக்காணம் அருகே சொரப்பட்டு கிராமத்தில் பிரதான சாலையில் உள்ள பாலத்தின் பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக ஒன்றிய குழு பெருந்தலைவர் கூறியுள்ளார்.


சேதம் அடைந்த பாலம்:


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே முருக்கேரி அடுத்து உள்ளது செரப்பட்டு கிராமம். இந்த கிராமத்தை சுற்றி ஐந்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இதில் 3000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் பெரும்பாலானோர் விவசாயிகள் ஆவர். இவர்கள் திண்டிவனம், மரக்காணம், சென்னை ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டுமென்றால் சொரப்பட்டு கிராமத்தில் உள்ள பெரியபாலம் வழியாகத் தான் செல்ல வேண்டும். ஆனால் இந்த பெரிய பாலம் சில ஆண்டுகளுக்கு முன் சேதம் அடைந்துள்ளது.


இதனால் இப்பகுதியில் புதிய பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் சொரப்பட்டு பெரிய பாலத்தை புதிய பலமாக அமைக்க அரசு 35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தப் பணியினை செய்ய வேண்டிய ஒப்பததாரர் சொரப்பட்டு சாலையில் இருந்த பழைய பாலத்தை கடந்த 3 மாதத்திற்கு முன் உடைத்துவிட்டு அப்பகுதியில் புதிய பாலம் அமைக்க முதற்கட்ட பணிகளை மேற்கொண்டு அதன் பின் பணிகளை கிடப்பில் போட்டுள்ளார். இதன் காரணமாக தற்போது பெய்த  மழைக்கே அந்த பாலத்தின் வழியாக தண்ணீர் ஓடுகிறது.




இதனால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட சாலையும் சேதம் அடைந்துள்ளது. எனவே கிராம மக்கள் வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஒரு சில வாரங்களில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. இப்பகுதியில் வடகிழக்கு பருவமழை துவங்கினால், இந்த பாலம் அமைக்கப்படும் இடத்தில் வெள்ளம் கரை புரண்டு ஓடும் அவல நிலை உள்ளது. மேலும் மாற்று வழியாக புறப்பட்டு கிராமத்தில் இருந்து முன்னூர் கிராமத்துக்கு செல்லும் பிரதான சாலையில் உள்ள தரைப்பாலமானது கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உடைந்து அதில் லாரி சிக்கி விபத்துக்குள்ளானது.


பணிகள் துரிதம்:


எனவே சொரப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் வெளியேற முடியாத சூழல் உருவாகியுள்ளதால் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் மழையின் போதும் இந்த கிராமத்திற்கு இதே நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ABPநாடு செய்தி வெளியிட்ட நிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் மரக்காணம் ஒன்றிய குழு பெருந்தலைவர் தயாளன் பாலத்தின் பணியை விரைந்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார்.