கலவரத்துக்குள்ளான கள்ளக்குறிச்சி பள்ளியை அரசு ஏற்று நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி, மரண சம்பவத்தை தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. பள்ளி கட்டிடம், பொருட்கள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசாரும், கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவும் தனித்தனியாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றன.

 

இந்நிலையில், பள்ளி மீண்டும் செயல்பட அரசு அனுமதித்துள்ளதாகவும், இது மாணவர்கள் - பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதால் பள்ளியை அரசு ஏற்று நடத்த உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர்  ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்,  இதே பள்ளியில் கடந்த 2004ம் ஆண்டும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், நான்கு ஆண்டுகளுக்கு முன் கட்டணம் செலுத்தாத மாணவர்கள் பள்ளிக்கு வெளியில் நிறுத்தப்பட்டதால் பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

 

முதல் சம்பவத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தால் மாணவி மரண சம்பவம் நிகழ்ந்திருக்காது எனவும் தெரிவித்துள்ளார். தற்போது இப்பள்ளியில் படித்ததால் தங்கள் குழந்தைகளை வேறு பள்ளிகளில் சேர்க்க மறுப்பதாகவும்,  இப்பள்ளியில் கட்டணம் செலுத்தி விட்டதால் மற்றொரு பள்ளியில் சேர்க்கை பெற இயலவில்லை எனவும் பெற்றோர் தெரிவித்துள்ளதால் பள்ளியை அரசு ஏற்று நடத்த கோரி செப்டம்பர் 14ம் தேதி மனு அளித்தும் அது பரிசீலிக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

 

மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சிறப்பு அதிகாரியை நியமித்து பள்ளியை அரசு தன் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.



 

தாய், தந்தை, சகோதரனை  பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் மகன் - மருமகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 


 

திண்டிவனம், காவேரிப்பாக்கம் சுப்பாராயன் தெருவை சேர்ந்த ராஜு - கலைச்செல்வி தம்பதிக்கு  கோவர்த்தனன், கவுதமன் என இரு மகன்கள் உள்ளனர்.

 

திண்டிவனம் நகர அதிமுக மாணவரணி தலைவர் மற்றும் நகர ஐ.டி. பிரிவு செயலாளராக இருந்த கோவர்த்தன், புதிய தொழில் தொடங்க பணம் கேட்டு  நச்சரித்தும், பணம் கொடுக்காததால் பெற்றோர் மற்றும் சகோதரன் மீது  கோபத்தில் இருந்து வந்தார்.

 

 இந்நிலையில் கடந்த 2019 மே 15ம் தேதி அதிகாலை 3 மணியளவில் ராஜுவின் வீட்டில் நெருப்பும் புகையும் வந்ததால் அக்கம் பக்கத்தினர் வாசல் கதவை உடைத்து திறந்து சென்று பார்த்த போது ராஜு, கலைச்செல்வி, கவுதமன் ஆகியோர் எரிந்த நிலையில் இறந்து கிடந்தனர்.

 

ஏசி பெட்டி வெடித்து பெற்றோரும், சகோதரனும் இறந்து விட்டதாக கோவர்த்தன், திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.  விசாரணையில், மூவரையும் கோவர்த்தனனும், அவரது மனைவி தீபகாயத்திரியும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தது தெரிய வந்தது.

 

இதையடுத்து இருவர் மீதும்  காவல் துறையினர் கொலை வழக்கு பதிவு செய்தனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் காரணமாக, இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

 

வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம்,  கோவர்த்தனன் மற்றும் தீபகாயத்ரியை குற்றவாளிகளாக அறிவித்து, இருவருக்கும்  மரண தண்டனை விதித்து 2021 அக்டோபரில் தீர்ப்பளித்தது. மரண தண்டனையை உறுதி செய்ய வழக்கு ஆவணங்களை சிறப்பு நீதிமன்றம், உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பியது. அதேபோல தண்டனையை எதிர்த்து இருவரும் மேல் முறையீடு செய்திருந்தனர்.

 

இந்த வழக்குகள், நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, இருவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனவும், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பல சாட்சிகள் பல்டி அடித்து விட்டதாகவும், ஏசி வெடித்து தான் மூவரும் இறந்துள்ளதாகவும், திட்டமிட்ட கொலை என்பது நிரூபிக்கப்படவில்லை எனவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

 

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கோவர்த்தன் மற்றும் தீபகாயத்திரிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்தனர். வேறு வழக்குகளில்  சம்பந்தப்படவில்லை என்றால் இவர்கள் இருவரையும்  உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.