மருத்துவகுணம் உள்ள சிவப்பு வெண்டக்காய்...விழுப்புரத்தில் விவசாயி அசத்தல்


விழுப்புரத்தில் இயற்கை முறையில் சிவப்பு வெண்டைக்காய் உற்பத்தி செய்யப்பட்டு பொதுமக்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும்  இயற்கை முறையில் உற்பத்தியாகும் காய்கறிகள், தானியங்கள், பழங்களை வாங்க பொதுமக்கள் திசை திரும்பியுள்ளனர். அதன் பயனாக, அழிந்து வரும் அரிய வகை பாரம்பரிய  நாட்டு காய்கறிகள் மீட்கப்பட்டுள்ளன. அதில் சிவப்பு நிற வெண்டைக்காயும் அடங்கும்.


பாரம்பரிய நாட்டு ரக சிகப்பு வெண்டை


விழுப்புரம் அருகே உள்ள விராட்டிக்குப்பம் பகுதியில் பாண்டியன் என்ற விவசாயி, தன்னுடைய நிலப்பரப்பில் பாரம்பரிய நாட்டு ரக சிகப்பு வெண்டைக்காய் சாகுபடி செய்து வருகிறார். இது தொடர்பாக விவசாயி பாண்டியன் கூறுகையில், வெண்டைக்காயில் கருப்பு நிற வெண்டை, நீல கத்தரி என 100 க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளது.  இதில் நான் குறைந்த அளவில் சிகப்பு வெண்டைக்காயை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறேன். இந்த சிகப்பு வெண்டைக்காயை தற்போது விற்பதற்காக பயிர் செய்யவில்லை,  விதை எடுத்து அதனை அடுத்த முறை பெரிய அளவில் பயிர் செய்ய திட்டமிட்டுள்ளேன்.




மருத்துவகுணம் உள்ள சிவப்பு வெண்டக்காய்...


பொதுமக்கள் வெண்டைக்காயை பச்சை நிறத்தில் தான் பார்த்து இருப்பார்கள். அதற்கு பதிலாக சிவப்பு நிறத்தில் உள்ளது. இது பச்சை வெண்டைக்காய் விட அதிக நன்மை பயக்கும் மற்றும் சத்தானது. இதயம் மற்றும் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், அதிக கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் பாண்டியன் கூறினார். மேலும், பனிக்காலத்தில் சிகப்பு வெண்டைக்காய் நல்ல முறையில் வளரும். வெயில் காலத்தில் சற்று இலைகள் சுருங்கி மஞ்சள் நிறத்தில் காணப்படும். சிகப்பு வெண்டைக்காயை கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் பயிரிட்டு வருகின்றனர்.


சிவப்பு வெண்டைக்காய் விலை அதிகம்...


விழுப்புரத்தில் குறைந்த அளவில் சிகப்பு வெண்டைக்காய் பயிர் செய்யப்பட்டு வருகிறது. பச்சை வெண்டைக்காய் விட சிவப்பு வெண்டைக்காய் ஒரு கிலோ 100 ரூபாய் முதல் 150 ரூபாய்க்கு விலை போகிறது. சாதாரண வெண்டைக்காய் 45 நாட்களில் அறுவடை செய்யப்படும்.  இது இரண்டு மாதம் வரை அறுவடை செய்யலாம்.  சாதாரண வெண்டைக்காய் விட கூடுதல் ஆயுட்காலமும் கூடுதல் வருமானமும் சிகப்பு வெண்டைக்காய் தரும். விவசாயிகள் நம்மளுடைய அடுத்த தலைமுறைக்கு பாரம்பரிய காய்கறிகளை கொடுக்க வேண்டும் அதற்கு விவசாயிகளும் பொதுமக்களும் முன்வர வேண்டும் என பாண்டியன் கூறினார்.