புதுச்சேரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள், மீனவர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி நிவாரணம் அறிவித்துள்ளார். இது குறித்து புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரியில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக 84 ஏரிகளில் 54 ஏரிகள் முழு கொள்ளவை எட்டியுள்தாகவும், மீதமுள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பும் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார், வழக்கமாக ஆண்டுக்கு சராசரியாக 134 செ.மீ மழை பெய்யும் நிலையில், இந்தாண்டு வழக்கத்திற்கு அதிகமாக 184 செ.மீ மழை பெய்துள்ளதாக தெரிவித்ததார்




இந்த கன மழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் 25 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் கூறினார். சேதமடைந்த 25 வீடுகளுக்கு தலா 25 ஆயிரமும் பாதிக்கப்பட்ட விளை நிலங்களில் ஹெக்டோர் ஒன்றுக்கு 20 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என தெரிவித்த முதலமைச்சர் ரங்கசாமி, இந்த கனமழை மற்றும் வெள்ளத்தால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள்  மற்றும் மீனவர்கள் குடும்ப அட்டைக்கு தலா 5 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.



தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி மழை பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருவதாகவும், மத்திய அரசிடம் இருந்து உரிய இழப்பீடு கேட்கப்படும் எனவும்  கால்நடை உயிரிழப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி மாடுகளுக்கு ரூபாய் 10 ஆயிரமும் ஆடுகளுக்கு 5 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் கன மழையில் சேதமடைந்த சாலைகளை செப்பனிட ரூபாய் 100 கோடிக்கு மேல் டென்ட விடப்பட்டுள்ளதாகவும், மழை காலம் முடிந்த பின் சாலைகள் முழுவதுமாக செப்பனிடப்படும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் நான் உட்பட அமைச்சர்கள், அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களில் தொடர்ந்து கலத்தில் இருப்பதாகவும், இதுகுறித்து எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு பொய்யானது எனவும் தெரிவித்தார்.


மேலும், புதுவை மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புதுவை மாநிலத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மீனவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு மிகவும் துயரத்தில் உள்ளனர். இந்த நிலையில் அவர்களது துயர் துடைக்கும் பொருட்டு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வரும் மழைக்கால நிவாரணம் ரூ.2,500 வழங்கப்பட உள்ளது.



இந்த தொகை சுமார் 18 ஆயிரத்து 200 குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும்   மத்திய  அரசின் பிரதம மந்திரி மட்சிய சம்பட யோஜனாவின் வாழ்வாதாரம் மற்றும் ஊட்டச்சத்து உதவி அளித்தல் என்ற திட்டத்தின்கீழ் சுமார் 13 ஆயிரத்து 65 மீனவர்களுக்கு தலா ரூ.4,500 வீதம் முதலமைச்சரின் உத்தரவுப்படி  வருகிற 15ஆம் தேதி முதல் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். முதலமைச்சர் ரங்கசாமி வருகிற 15ஆம் தேதி இதனை தொடங்கி வைப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.