தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள விழுப்புரம் கள்ளச்சாராயம் விவகாரத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. 


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கடந்த மே 16 ஆம் தேதி கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. அந்த கள்ளச்சாராயத்தை அதே கிராமத்தை சேர்ந்த 44 பேர் வாங்கி குடித்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்த சிறிது நேரத்தில்  அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கள்ளச்சாராயம் குடித்த 44 பேரும் முண்டியம்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.


ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய 3 பேரும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தனர். மேலும், சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், கள்ளச்சாராய வியாபாரி அமரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதனிடையே, கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்த நிலையில் எக்கியார் குப்பத்தை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 லட்சம் நிவாரணம் அறிவித்திருந்தார். மேலும் நேற்று முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்களை சந்தித்து முதலமைச்சர் ஆறுதல் தெரிவித்தார். 




இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து ஆபத்தான நிலையில் நேற்று  விழுப்புரம் முண்டியம்பாக்கம், திண்டிவனம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜ மூர்த்தி, மலர்விழி, மன்னாங்கட்டி என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. இதை தொடர்ந்து நேற்று  சிகிச்சையில் இருந்த விஜயன்,கேசவ வேலு, சங்கர்,விஜயன்,ஆபிரகாம்,சரத்குமார் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.


இந்நிலையில் இன்று காலை ராஜவேல்(38) என்பவர் உயிரிழந்துள்ளார். இதனால் சிகிச்சையில் இருப்பவர்கள் உறவினர்கள் அச்சமடைந்துள்ளனர்.


முன்னதாக கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் விவகாரம் தொடர்பாக விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வடிவழகன், உதவி ஆய்வாளர்கள் தீபன்,சீனுவாசன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் மரியா, உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


இதுவரை இறந்தவர்களின் விவரம்


தற்போது வரை உள்ள இறப்பு எண்ணிக்கை: 13


1. சங்கர் வயது,   


 2.தரணிவேல்  


3. சுரேஷ் 


4. ராஜமூர்த்தி 


5. மலர்விழி 


6. மண்ணாங்கட்டி 


7. விஜயன் 


8. சங்கர்  


9. கேசவ வேலு  


10. விஜயன்  


11. ஆபிரகாம் 


12. சரத்குமார்  


13. ராஜவேல்