வேலூர் மாவட்டம் காட்பாடியில் இன்று 68-வது கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் பங்கேற்று, சிறு வணிக கடன், மகளிர் சுய உதவி குழு கடன், வேளாண்மை கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை 1,151 நாபர்களுக்கு ரூ.10 கோடி மதிப்பில் கடன் உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், கூட்டுறவுத் துறையில்  பணிபுரிபவர்கள் நேர்மையாக பணி புரிய வேண்டும் எனவும், தவறு செய்பவர்கள் யாராயிருந்தாலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். அப்படி கைது செய்யப்பட்டவர்கள் சிறைச்சாலைக்கு செல்லும் போது அங்கு ஒன்று சேர்ந்து ஒருவருக்கு ஒருவர் ட்ரெயின் பண்ணி அனுப்புவார்கள் இதனால் சிறைச்சாலை என்பது ஆராய்ச்சி சாலையாக மாறிவிடுகிறது என அமைச்சர் கூறினார்.

 



 

கூட்டுறவுத் துறையால் பல நாடுகள் முன்னேற்றம் அடைந்துள்ளன. கூட்டுறவுத்துறையில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் நல்ல திட்டங்கள் தான். ஆனால் அதனை செயல்படுத்துவதில் தான் பல குறைகள் உள்ளது. அந்த குறைகள் களையப்பட வேண்டும். அதற்கு கூட்டுறவுத் துறையில் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் பொறுப்பாளர்களும் நேர்மையாக பணியாற்ற வேண்டும். கடந்த ஆட்சியில் போலி நகைகள் மற்றும் போலி ஆவணங்கள் வைத்து கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர். அவ்வாறு கடனுதவிகள் பெற்றவர்கள் கண்டிப்பாக கைது செய்யப்படுவார்கள். அந்த முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. கூட்டுறவுத்துறையில் மகளிர் வாங்கும் கடன்கள் நேர்மையாக திருப்பி செலுத்தி வருகிறார்கள்.

 

ராணிப்பேட்டை திருப்பத்தூர் வேலூர் ஆகிய மாவட்டங்களில் நடப்பாண்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் 87 ஆயிரத்து 443 விவசாயிகளுக்கு 617 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாக கூறினார். ஐந்து சவரன் உட்பட்ட கடன் தள்ளுபடியில் 2 லட்சத்து 476 உறுப்பினர்களுக்கு 160 கோடி ரூபாய் அளவிற்கு பொது நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் கடந்த மாதம் இறுதிவரை 25 ஆயிரத்து 803 விவசாயிகளுக்கு 170 கோடி அளவிற்கு பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது.



 

நீர்நிலைகளில் எங்கு ஆக்கிரமிப்பு செய்து இருந்தாலும் அதனை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்ற வேண்டும். மேலும் வேலூர் மாவட்டம் அகரம் ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்பை மாவட்ட ஆட்சியர் உடனடியாக அகற்ற வேண்டும் எனக் கூறினார். இந்த விழாவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர். 

 

அமைச்சர் காந்தி, எம்.பி ஜெகத்ரட்சகனை கலாய்த்த துரைமுருகன்

 

கூட்டுறவுத்துறையில் தப்பு பண்ணா நேரா தொரப்பாடி ஜெயிலுக்கு தான் போகணும், அங்க போனா எல்லாரும் சேர்ந்து ரெய்னிங் எடுத்து சிறைச்சாலையை ஆராய்ச்சி சாலையாக்கிவிடுகிறார்கள். நம் அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகன் என்னைக்கும் வராத மழையாக இன்னைக்கு தா நம்ம காட்பாடிக்கு வந்துள்ளார். காட்பாடிக்கு மட்டும் அவர் வர்ரதே இல்லை. எப்ப பார்த்தாலும் ராணிப்பேட்டை அமைச்சர் காந்தி வீட்டிலேயே இருக்கார். எப்படியும் அடுத்த முறையும் எம்.பி தேர்தலில் நிப்பார் என நினைக்குறேன் இப்பவே குப்பிடு போட்டு வைத்துக்கொள்ளுங்கள் என ஜெகத்ரட்சகனை கலாய்த்தார்.