விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார்.

 

தமிழகம் முழுவதும் வரும் 07/09/2024 விநாயகர் சதுர்த்தி  கொண்டாடப்படுகிறது. தமிழக முதலமைச்சரின் சீரிய வழியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வரும் நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கின்றது. 

 

நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி (www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச் சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டார்.



 

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ரசாயனம் இல்லாத விநாயகர் சிலைகள் இவ்வாறு இருக்க வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆஃப்பாரிஸ் (POP), பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

 

சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள். வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்

 

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர் நிலைகள் மாசு படுவதை தடுக்கும் பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள் பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத இரசாயன சாயம்/எண்ணை வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு தகுந்த நீர் சார்ந்த  மக்கக் கூடிய  நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

 

சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப் படவேண்டும்.

 

விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின்

 

*விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும். விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான திருப்பத்தூர் மாவட்டத்தில்  கண்டறியப்பட்ட நீர்நிலைகள்*

 

1.ஆதியூர் ஏரி (திருப்பத்தூர்).

 

2. கல்லுகுட்டை ஏரி (நாட்றம்பள்ளி).

 

3. சான்றோர்குப்பம் ஏரி (ஆம்பூர்),

 

4. பொன்னேரி எரி (ஜோலார் பேட்டை).

 

5. பள்ளிப்பட்டு ஏரி (வாணியம்பாடி).

 

6. ஆனைமடுவு ஏரி (ஆம்பூர்).

 

விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு கொண்டாடும்படி திருப்பத்தூர் மாவட்ட பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 

மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.