வடகிழக்கு பருவ மழையின் காரணமாக நேற்று முதல் வேலூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்ததன் காரணமாக பேர்ணாம்பட் பகுதியில் உள்ள சிறிய காட்டாட்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காட்டாட்றின் அருகே வசித்து வந்த இரண்டு குடும்பத்தினர், பாதுகாப்பு காரணத்திற்காக இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் அருகே உள்ள ஹஜிஜியா தெருவில் வசித்து வரும் ஹபீப் என்பவரது மாடி வீட்டுக்குச் சென்று தங்கியுள்ளனர். தொடர் மழையால் இன்று (நவ 19) காலை பலவீனமாக இருத்த அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த கட்டிட விபத்தில் இடிபாடுகளில் சிக்கி மன்னன், அப்ரார், தௌலத், மனுல்லாஹ், மிஷா ஃபாத்திமா, அனிஷா, ரூஹி, தன்சிலா, கௌசர் என 2 வயது குழந்தை, 4 குழந்தைகள் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 



 

மேலும் இடிபாடுகளில் சிக்கிய மீதமுள்ள 8 பேரை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு துறையினர்(National Disaster Response Force) ஈடுபட்டனர். மீட்கப்பட்டவர்கள் பேரணாம்பட்டு மற்றும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மீட்பு பணிகளை பார்வையிட்டார்.

 



 

இது குறித்து பேர்ணாம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் பேர்ணாம்பட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பலவீனமான, பழைய கட்டிடம் என்பதால் எளிதில் இடிந்திருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த கோர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 



 

மழை காரணமாக நீர் நிலைகளுக்கு அருகில் இருக்கக்கூடிய அவர்களும் தாழ்வான பகுதியில் இருக்கக்கூடிய அவர்களும் அரசு ஏற்படுத்தியுள்ள முகாம்களில் தங்க வேண்டுமென வேலூர் மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. வேலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 தொகுதிகளில் 35க்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.  வீடு இடிந்து விழுந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதலமைச்சர் நிவாரணம் அறிவித்துள்ளார். 

 



 

இந்த விபத்து தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், கனமழை காரணமாக வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, மசூதி தெருவில் வீடு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி நான்கு குழந்தைகளும், ஐந்து பெண்களும் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தம்  அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூபாய் 50 ஆயிரமும் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என முதலமைச்சர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.