வேலூர் (Vellore News): வேலூரில் உள்ள ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவன இயக்குநர்களின் உறவினர்கள் அலுவலகங்கள், வீடுகளில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது. ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவனம் பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி சுமார் ரூபாய் 6,000 கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து, ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவனம் மீது பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வேலூரில் உள்ள ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவன இயக்குனர்கள் வீடுகளில் டெல்லி மற்றும் சென்னையை சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் சத்துவாச்சாரி, காட்பாடி மற்றும் மேல்பாடி ஆகிய மூன்று இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அரக்கோணம் அருகே உள்ள ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவனத்தின் முகவர் குமார் என்பவருடைய வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


தற்போது ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவன இயக்குனர்கள் ஜனார்த்தனன், லட்சுமி நாராயணன், வேத நாராயணன் மற்றும் மோகன் பாபு ஆகியோர் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. நிதி மோசடியில் ஈடுபட்ட ஐஎஃப்எஸ் நிறுவன இயக்குனர்களுக்கு ஏற்கனவே ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.