திண்டிவனத்தில் இருந்து வந்தவாசி, செய்யாறு, ஆரணி வழியாக ஆந்திர மாநிலத்தில் உள்ள நகரி வரை ரயில் பாதை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் செய்யும் பணிகள் நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் 5-வது முறையாக ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தில் மட்டும் 244 நபர்களிடம் இருந்து ரயில் பாதைக்காக நிலம் எடுக்கும் பணிக்கு சம்பந்தப்பட்டவர்களுடன் பணிகள் விரைந்து முடிக்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு உதவி ஆட்சியர் எம்.தனலட்சுமி வரவேற்றார்.




 


இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பேசுகையில்; 


 “ஆரணி பகுதியில் உள்ள இரும்பேடு கிராமத்தில் மட்டும் 21 ஹெக்டர் பரப்பளவில் நிலம் தேவைப்படுகிறது. நிலம் வழங்கக்கூடியவர்கள் அவர்களுடைய பெயரில் இருக்கும் பட்டா இருக்க வேண்டும். பட்டா பெறுவதில் வாரிசு அடிப்படையில் சிக்கல்கள் இருந்தால் அதுபற்றி என்னிடம் தெரிவிக்கலாம் அல்லது அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்” என்று தெரிவித்தார். அப்போது விவசாய அமைப்பு சேர்ந்த சங்க நிர்வாகிகள் பேசுகையில், “எங்கள் இடத்திற்கு குறைவாக அதிகாரிகள் மதிப்பீடு செய்கிறார்கள். மத்திய அரசு கணக்கீடு செய்யும் தொகையை வழங்க வேண்டும். மாநில அரசு கணக்கீடு செய்யும் தொகையை வழங்க வேண்டாம் எனப் பேசினார். அப்போது மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பேசுகையில், ”உங்கள் நிலம் எங்கே உள்ளது பட்டா விவரங்களை என்னிடம் காட்டுங்கள் அதற்கு என்ன மதிப்பீடு செய்ய முடியும் என்று நான் சொல்கிறேன்” என தெரிவித்தார்.


 




 


அதற்கு அவர், இடம் என்னுடையது அல்ல எனது சகோதரிக்குரியது என்று தெரிவித்தார். இதனால் மாவட்ட ஆட்சியர் முருகேஷ், அவரை வெளியே அழைத்து செல்லும்படி காவல்துறையினரிடம் கூறினார். உடனே அவரை, காவல்துறையினர் வெளியே அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து நிலம் எடுப்பு சம்பந்தமாக நில உரிமையாளர்களிடம் நகல் காப்பிகளை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பெற்றுக்கொண்டார். இந்த கூட்டத்தில் கூட்டத்தில் ஆரணி தாசில்தார் ரா.மஞ்சுளா, ரயில் பாதை நில எடுப்பு தாசில்தார்கள் வேணுகோபால், தமிழ்மணி, மூர்த்தி, நில அலுவலர் விஜயன், ஆரணி மண்டல துணை தாசில்தார் பிரியா, இருப்பேடு கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன், ஆரணி சார்பதிவாளர் (பொறுப்பு) தெய்வசிகாமணி, ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலட்சுமி, பிரபாகரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.