திருப்பத்தூர் அருகே  ஐந்து அடி அளவிலான பள்ளம் ஏற்படுத்திய மர்ம பொருள் எரி கல் என மாவட்ட அறிவியல் அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.

 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் சொட்டை கவுண்டர் பகுதியில் ரவி என்பவருடைய நிலத்தில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மர்ம பொருள் ஒன்று விழுந்துள்ளது. அதன் காரணமாக சுமார் ஐந்து அடி அளவிலான பள்ளம் உருவாகியுள்ளது.

 

இதனை அதே பகுதியைச் சேர்ந்த திருமலை என்பவர் பார்த்துள்ளார். ஆனால் ஏதோ சாதாரண பள்ளம் என்று நினைத்து விட்டுவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் திரும்பவும் அதே இடத்திற்கு சென்ற திருமலை அந்தப் பள்ளத்தை பார்க்கும்போது அந்த பள்ளத்திலிருந்து அதிக வெப்ப அனல் வெளியாகியுள்ளது. ஊர் மக்களிடம் கூறுகையில், அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். மேலும் மர்ம பொருள் என்னவென்று தெரியாமல் பீதியும் அடைந்தனர்.



 

இந்த சம்பவம் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டார். மேலும்  மாவட்ட அறிவியல் மையம் அலுவலருக்கு விழுந்த மர்ம பொருள் என்னவென்று கண்டறிய வேண்டும் எனவும் பரிந்துரை செய்தார்.

 

இதன் காரணமாக சென்னை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் செயல் இயக்குனர் லெனின் தமிழ் கோவன் உத்தரவின்படி, வேலூர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட அறிவியல் மையம் மாவட்ட அறிவியல் அலுவலர் பொறுப்பு ரவிக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து 5 அடி பள்ளத்திலிருந்து மண் மற்றும் சாம்பலின் மாதிரிகளை சேகரித்தார். அதேபோல் பள்ளத்தின் அருகே உள்ள மண் மாதிரிகளையும் சேகரித்தார்.



 

இந்த மண் மற்றும் சாம்பலின் மாதிரிகளை சென்னை நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் கூறினார்.

 

அதனைத் தொடர்ந்து  இந்த பகுதியில் விழுந்த மர்ம பொருள் எரிகல்தான். விழுந்த வேகத்தில் மண் சாம்பலாக மாறி உள்ளது. இது செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையே சுற்றி தெரியும் சிறு கோள்களாகவும் பின்னர் பூமி நோக்கி வரும்பொழுது எரிகல்லாக மாறிவிடும் எனவும் தகவல் தெரிவித்தார்.