வாணியம்பாடியில் அரசுப்பள்ளியில் படிக்கும் 8 ஆம் வகுப்பு மாணவன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு, அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ரஜினி. இவரது மகன் கோபிநாத் கிரிசமுத்திரம்  பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

 

கோபிநாத்திற்கு கடந்த 2 ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், கோபிநாத்தை அவரது பெற்றோர் உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.



   

அங்கு மாணவனுக்கு 3 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இதனை தொடர்ந்து  மாணவனை அவரது பெற்றோர்க பெங்களூரில்  உள்ள தனியார் மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

 

கோபிநாத்திற்கு தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் விடியற்காலை சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளான். பின்னர் கோபிநாத்தின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

 

மேலும் பள்ளி மாணவன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.