விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 3 பழங்குடியினரை , திண்டுக்கல் மாவட்டத்திற்கு வேலைக்குச் சென்றவர்களை , 10 லட்சரூபாய் மதிப்பிலான , காப்பர்  வயர்களை  திருடியதாக , திருப்பூர் மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்  . இது பொய் வழக்கு என்றும் , கைது செய்யப்பட்ட மூவரும் அப்பாவிகள் என்றும் , பாதிக்கப்பட்டவரின் குடும்பாத்தார் , தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனருக்கு கடிதம் எழுதி உள்ளனர் .


விழுப்புரம் மாவட்டம் , விக்கிரவாண்டி வட்டத்திற்குட்பட்ட ,  சிறுவாலை கிராம , இருளர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சம்மாள் (வயது 31 )  இவருக்கு சிவகுமார் (34 ) என்ற  கணவரும் , சரவணன் (11 ) என்ற மகனும் உள்ளனர் .


முன்னதாக , காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில்  செங்கல் சூளையில் வேலை செய்து வந்த தம்பதியருக்கு ,  கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்ததால் , வேலையின்றி இருந்துள்ளனர் .




இந்நிலையில் , சிறுவாலை   கிராமத்திற்கு அடுத்துள்ள கெடார்  கிராமத்தை சேர்ந்த மணி மேஸ்திரி என்பவர் அஞ்சம்மாள் மற்றும் அவரது கணவரை தொடர்பு கொண்டு , திண்டுக்கல் மாவட்டத்தில் செங்கல் அறுக்கும் வேலை இருப்பதாக கூறியுள்ளார். ஒரு லட்ச ருபாய் வரை முன்பணம் தருவதாகவும், இருவரும் நாள் ஒன்றுக்கு அறுக்கும்  1000 செங்கலுக்கு , 700 ருபாய் கூலி வழங்கி , அதில் அவர்களுக்கு  கொடுத்த ஒரு லட்சரூபாய் முன்பணத்திற்கு , தினமும் 500 ருபாய் வீதம் பிடித்தம் செய்து கொண்டு மீதி பணத்தை வார  கூலியாக தந்து விடுவதாக கூறியுள்ளார். வறுமை காரணமாக தம்பதி அதற்கு ஒப்புக்கொண்டு திண்டுக்கல் சென்றது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு லட்சரூபாய் முன்பணம் பெற்று , திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பெரிச்சிபாளையத்தில் , தாராபுரம் சுந்தருக்கு சொந்தமான இடத்தில செங்கல் அறுக்கும் வேலைக்குச் சென்றனர். இவர்கள் மூலமாக இவர்களது உறவினர்களான அசோக் குமார் (40 ) , அவரது மனைவி மீனா (36 ) , வெற்றிவேல் ( 29 ) அவரது மனைவி சுப்புலட்சமி (21  ) உள்ளிட்டோரும் முன் பணம் பெற்ற பணிக்கு சென்றனர். 




இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 24 ஆம் தேதி ) இரவு சிவகுமார் , அசோக் குமார் மற்றும் வெற்றிவேல் ஆகிய மூவரும் , அருகே  உள்ள கொங்குர் கிராமத்திற்கு சென்று அங்குள்ள ஆற்றில் , தூண்டில் மட்டும் வலை கட்டி மீன் பிடித்துள்ளனர் .


இரவு சுமார் 1 மணியளவில் , மீன் பிடித்து விட்டு பெரிச்சிபாளையத்திற்கு , இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டு இருக்கும் பொழுது அந்த ஊரை சேர்ந்த ஒருவர், அவர்களது வாகனத்தை நிறுத்தி , அவர்கள் மூவரையும் போனில் போட்டோ எடுத்துவிட்டு அவர்களை அனுப்பியுள்ளார்  .




இவர்கள் பெரிச்சிபாளையத்தில் உள்ள செங்கல் சூளைக்கு வந்து உறங்கிக் கொண்டு இருக்கும் பொழுது , அதிகாலை 3 மணியளவில் , திருப்பூர் மாவட்டம் அலங்கியம் காவல் நிலையத்தில்  இருந்து  சீருடை அணியாத  காவலர் ஒருவர் , அவர்கள் மீன்பிடிக்க சென்ற கொங்குர் கிராமத்தை சேர்ந்த ஊர்மக்கள் 10 பேருடன் வந்துள்ளார்  , செங்கல் சூளையில் தூங்கி கொண்டிருந்த அசோக் குமார் , சிவகுமார் , வெற்றிவேல் ஆகிய  மூவரையும் எழுப்பி , "நீங்கள் கொங்குர் கிராமத்தில் மீன் பிடிப்பது போல சென்று அங்குள்ள , 10  லட்ச மதிப்பிலான நீர் மோட்டார் இணைப்பு கொடுக்க பயன்படுத்தப்படும் காப்பர் வயர்களை திருடி உள்ளதாக புகார் வந்துள்ளது" என்று கூறி , அடுத்த நாள் காலை அலங்கியம் காவல் நிலையத்திற்கு வருமாறு , அவர்களது இரு சக்கர வாகனத்தை அங்கு இருந்து எடுத்து சென்றுள்ளனர் .


அடுத்த நாள் காலை இவர்கள் மூவரும்  அலங்கியம் காவல் நிலையம் சென்ற பொழுது , அங்கு இருந்த உதவி ஆய்வாளர் ஒருவர் ,  அவர்களை கடுமையாக தாக்கி ,  'அசோக் குமார் , சிவகுமார் , வெற்றிவேல் ஆகிய இவர்கள் தான், 10 லட்ச ருபாய் மதிப்பிலான  காப்பர் வயர்களை திருடியவர்கள்' என்று வழக்கு பதிவு செய்யுங்கள் என்று காவல் நிலையத்தில் இருந்த காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்  ,வழக்கு பதிந்தோடு  நில்லாமல் அவர்கள் மூவரையும் , நீதிபதி முன் ஆஜர்படுத்தி ,  திருப்பூர் மாவட்ட சிறைச்சாலையில் அடைத்துள்ளனர் .


என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த இவர்களது மனைவிகள் , இவர்கள் உறுப்பினர்களாக இருக்கும்  பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தை தொடர்பு கொண்டு . பேராசிரியர்  பிரபா கல்விமணி மூலம் ,  புகார் ஒன்றை தயார் செய்து , தமிழ் நாடு காவல் துறை தலைமை இயக்குனர் (டி ஜி பி) , மற்றும் திண்டுக்கல் , திருப்பூர் , விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர் .




அவர்களது அந்த மனுவில் , நடந்த சம்பவங்களை அனைத்தையும் விவரித்து , 'பொய்வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டுள்ள மூவரும் அப்பாவிகள் என்றும் , அவர்கள் மீன் பிடிக்கவே கொங்குர் கிராமத்திற்கு சென்றதாகவும் , அனால் திருப்பூர் மாவட்ட போலீசார் , இவர்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் .


இது தொடர்பாக , ABP நாடு செய்தி குழுமத்திடம் பேசிய , பேராசிரிய பிரபா கல்விமணி , "பழங்குடியினர் மீது பொய் வழக்கு போடுவது ஒன்றும் புதியது இல்லை  , ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்தே , பழங்குடியினர் குற்ற பரம்பரையாகவே பார்க்கப்படுகின்றனர் . ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே சுதந்திரத்துக்காக ஆயுதம் எடுத்து போராடி வந்த பழங்குடி மக்கள் மீது , தேசத்துரோக வழக்குகள் மட்டும் திருட்டு வழக்குகள் பதிந்து வந்தனர்  . ஆங்கிலேயர்களை தொடர்ந்து காவல் துறையினரும் , அவர்களால் கண்டுபிடிக்க முடியாமல் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் வழக்குகளை  , பழங்குடியினர் மீது சுமத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர் .' இந்த வழக்கை பொறுத்தவரை  முதற்கட்டமாக , சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூவரையும் பிணையில் எடுப்பதற்கான வேலைகளை செய்து வருகிறோம் . இதனை தொடர்ந்து , பொய் வழக்கு பதிந்து , அவர்களை கடுமையாக தாக்கி , சிறையில் அடைக்க காரணமாக இருந்த  காவல் துறை அதிகாரிகள் மீது நீதிமன்றத்தின் வாயிலாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்