திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் அரசு பேருந்து இயக்காத காரணத்தால் பேருந்தில் இடம் பிடிப்பதற்காக மாணவர்களுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செய்யாறில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் இரண்டு பிரிவாக காலை 8 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மற்றும் 2 மணி முதல் 4 மணி வரை கல்லூரி செயல்பட்டு வருகிறது. அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வந்தவாசி, ஆரணி, செய்யாறு, ஆற்காடு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 8,000-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்‌. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றார்போல கல்லூரி நேரத்தில் அரசு போதிய அளவுக்கு பேருந்து இல்லாததால் கல்லூரிக்கு வரும்போதும்,


 


 






பேருந்தில் இடம் பிடிக்க மாணவர்கள் மோதல் 


கல்லூரி விட்டு வீடு திரும்பும்போதும் மாணவர்கள் பேருந்துகளில் ஓடிச்சென்று முட்டி மோதிக் கொண்டு இடம் பிடித்து கொண்டும், படியில் தொங்கியபடியும் தினந்தோறும் பயணம் செய்து வருகின்றனர். நேற்று கல்லூரிக்கு காலை சுழற்சியில் வகுப்பு முடித்து மாணவர்கள் கல்லூரியில் இருந்து வெளியில் வந்துள்ளனர். மதியம் 1.30 மணி அளவில் புறவழிச் சாலை வழியாக பேருந்து நிறுத்தத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஆரணி பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடையே பேருந்தில் இடம் பிடிப்பத்தில் போட்டி ஏற்பட்டது. திடீரென மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது கல்லூரி வளாகம் முன்பு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.


 




 


கூடுதல் பேருந்து இயக்க மாணவர்கள் கோரிக்கை 


மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து ஒருவருக்கொருவர் பிடித்து கீழே தள்ளி சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. உடனடியாக அங்கு இருந்தவர்கள் செய்யாறு காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த செய்யாறு காவல்துறையினர் விரைந்து கல்லூரி மாணவர்கள்  ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட மாணவர்களை கலைத்தனர். அங்கு இருந்து மாணவர்கள் செல்லும் வரையில் காவல்துறையினர் அங்கேயே இருந்தனர். கல்லூரி மாணவர்கள்  போதிய அளவில் பேருந்து வசதி இல்லாததால் பேருந்து படிகட்டுகளில் தொங்கியபடியும், பேருந்தை விட்டால் மற்றொரு பேருந்திற்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என அதிகாரிகளிடம் மாணவர்கள் மனுக்கள் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. கூடுதல் பேருந்து இயக்காததால் மாணவர்களுக்குள் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.