இந்தியா முழுவதும்  ஏழை எளிய  மக்களுக்கும் மற்றும் வீடு கட்டுவதற்கு வசதி இல்லாதவர்களுக்கும் மத்திய அரசு  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம்  என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  மத்திய அரசு திட்டங்களின்  பணிகளைத் தேர்வு செய்வது, பயனாளிகளைத் தேர்வு செய்வதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பெண் ஒன்றியக் குழுத் தலைவர்கள் மற்றும் அவர்களது கணவர்கள் தலையீடுவதாக கூறி திருவண்ணாமலை அடுத்த துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊராட்சித் தலைவர்கள் போராட்டங்களை நடத்தி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருவண்ணாமலைக்கு வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறும்போது திருவண்ணமலை மாவட்டத்தில் மத்திய அரசுத் திட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம் எனவும்  கூறி இருந்தார்.



அதனை தொடர்ந்து, கலசப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றத் தலைவர்கள், அலுவலகங்களில் சாவிகளை, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒப்படைத்து அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்தநிலையில்  கலசப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர்கள் சங்கத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் எழில்மாறன் மற்றும் பொருளாளர் வசந்தகுமார் உள்ளிட்டோர் அளித்துள்ள மனுவில், 'கலசப்பாக்கம் ஒன்றியத்தில் 45 கிராம ஊராட்சிகள் உள்ளது. இதில் மத்திய, மாநில அரசுகள் மூலம் கிராம ஊராட்சிகளுக்கு வழங்கும் திட்டப் பணிகளைச் சிறப்பாகவும், செம்மையாகவும் செயல்படுத்தி பணியாற்ற கிராம மக்களால் எங்களை தேர்ந்தெடுக்கப்பட்டுளோம். ஆனால், தற்போது நிலவும் சூழ்நிலையில், கிராம மக்களுக்கு எங்களால் சேவை செய்ய முடியாத நிலையில் உள்ளோம். கிராம ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலக நிர்வாகம், ஒன்றியக் குழுத் தலைவர் மற்றும் அவரது கணவர் தலையீடு அதிகம் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் மூலம் வழங்கப்படும் மானிய நிதி, கிராம ஊராட்சிக்குப் போதியளவு வழங்குவதும் இல்லை .



மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் பணிகள் மற்றும் பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டங்களில் பயனாளிகளைத் தேர்வு செய்வதில் வட்டார வளர்ச்சி அலுவலக நிர்வாகம் மற்றும் ஒன்றியக் குழுத் தலைவர் மற்றும் அவரது கணவரின் தலையீடு அதிகம் உள்ளது. கிராம ஊராட்சி செயலாளர்களைச் செயல்பட விடாமல் தடுக்கின்றனர். பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு, அதிகாரம் இல்லாத சிலர், நிர்வாகத்தில் தலையிட்டு கிராம ஊராட்சியைச் செயல்படவிடாமல் தடுக்கின்றனர். பெண் தலைவர்கள் உள்ள ஊராட்சியில், அதிகாரம் இல்லாதவர்கள் தலையிட்டு, தலைவர்களின் பணியைத் தடுத்து சீர்குலைக்கின்றனர்.



இதுபோன்ற காரணங்களால், கிராம ஊராட்சியை எங்களால் சிறப்பாகச் செயல்படுத்த முடியவில்லை. எனவே, அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும், ஊராட்சி நிர்வாகத்தைத் தாங்களே மேற்கொள்ளலாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். மேலும், அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும், கிராம செயல் அலுவலராகப் பணியாற்றுகிறோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி மன்றத் தலைவர்கள் அளித்த அலுவலக சாவிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் விவேகானந்தன் பெற்றுக்கொண்டதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.