வேலூர் மாநகர் சத்துவாச்சாரி மந்தவெளி தெரு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எதிரே தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் மீது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மோதியதில், அவர் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர்  வேகமாக மோதியதில் அந்தப் பெண்மணி தூக்கி வீசப்பட்டுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அந்த நபர் இடித்ததோடு மட்டுமில்லாமல் கீழே விழுந்த பெண்மணிக்கு என்ன ஆனது என்று கூட கண்டுகொள்ளாமல் அங்கே விழுந்து கிடக்கிறார், பாருங்கள் என்று மற்றொரு தூய்மை பணியாளரிடம் கை காட்டிவிட்டு மிக அலட்சியமாக செல்கிறார்.


இதனையடுத்து மற்றொரு தொழிலாளி கூச்சல் போடவே அங்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து கால் முறிவு ஏற்பட்ட விஜயலட்சுமியை மீட்டு முதலுதவி அளித்து ஆம்புலென்ஸ் வரவைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சத்துவச்சாரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து இடித்துச் சென்ற நபரை தேடி வருகிறனர். தூய்மை பணியில் இருந்த தொழிலாளரை இடித்துவிட்டு முதல் உதவி கூட அளிக்காமல் மனிதாபிமானம் இல்லாமல் இரக்கமில்லாத மனம் கொண்ட அந்த நபரின் செயல் பேசும்பொருள் ஆகியிருக்கிறது.