தமிழகம் முழுவதும் ஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவர்களுக்கு செப்டம்பர் 2 ஆம் தேதி  பொதுத்தேர்வு தொடங்கியது. தேர்வு தொடங்கிய நிலையில் மாணவ, மாணவிகள் தேர்வைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கொரோனா காலகட்டத்தில், நேரடியாக மையங்களுக்கு சென்று தேர்வு எழுதுவதால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே ஆசிரியர் பட்டய தேர்வை ஆன்லைன் வழியாக நடத்த வேண்டும். மேலும் கடந்த 3 ஆண்டுகளாகத் தேர்வுக்கான மதிப்பெண் மதிப்பிடுவதில் குளறுபடி ஏற்பட்டு, ஏராளமான மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . 


வேலூர் மாவட்டத்தில்
  இந்த தேர்வை எழுத வேலூர் ஊரீசு மேல்நிலைப்பள்ளி, செயின்ட் மேரீஸ் மேல்நிலை பள்ளி, வெங்கடேஸ்வரா மேல்நிலை பள்ளி ஆகிய 3 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் சென்ற தேர்வில் போராட்டம் செய்தது போல் நேற்று நடந்த தேர்விலும்  2ஆம் ஆண்டு மாணவர்கள் ஆன்லைனில் தேர்வு எழுத அனுமதிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர் . கடந்த செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி வெங்கடேஸ்வரா பள்ளியின் முன்பு இதே 2 ஆம் ஆண்டு மாணவர்கள் ஆன்லைனில் தேர்வு எழுத அனுமதிக்கக் கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைப் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் சமரசம் செய்து தேர்வு எழுத வைத்தனர்.



 

இந்த நிலையில் 2 ஆம்  ஆண்டு மாணவர்களுக்கு நேற்று தமிழ் மற்றும் தெலுங்கு கற்பித்தல் தேர்வு நடைபெற்றது . இந்த தேர்வை எழுத 243 மாணவ மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெற்றது. இதையொட்டி காலை 8.30 மணி முதல் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வரத் தொடங்கினர். வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலை பள்ளிக்கும், செயின்ட் மேரீஸ் மேல்நிலை பள்ளிக்கும் தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகள், கொரோனா நோய் தொற்று மீண்டும் பரவ தொடங்கியுள்ளதால் தங்களை  ஆன்லைனில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று தேர்வு மையத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 



 

இதுகுறித்து தகவலறிந்த வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் அங்கு லட்சுமி, வட்டாட்சியர் செந்தில், தெற்கு காவல்துறை ஆய்வாளர் நந்தகுமார் ஆகியோர் 2 தேர்வு மையங்களுக்கும் சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து செயின்ட்மேரீஸ் தேர்வு மைய மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டுத் தேர்வு எழுதச் சென்றனர். ஆனால் வெங்கடேஸ்வரா தேர்வு மையத்தின் முன்பு 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமர்ந்து தேர்வைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2 ஆம் தேதி ஆன்லைனில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அடுத்து தேர்வில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என அதிகாரிகள் வாக்குறுதி கொடுத்திருந்தனர்  ஆனால் இந்த தேர்விலும் இதற்கான  நடவடிக்கை எடுக்கபடவில்லை. அதனால் தேர்வை புறக்கணிக்கிறோம் என்றனர். 



 

அதிகாரிகள் தொடர்ந்து பேசியும், மாணவர்கள் தேர்வு எழுதச் செல்லவில்லை. இந்த சம்பவத்தால் 2 தேர்வு மையங்களிலும் பரபரப்பு ஏற்பட்டது. தொடக்கக்கல்வி பட்டய தேர்வில் 243 மாணவர்கள் தேர்வு எழுதப் பதிவு செய்திருந்த நிலையில் நேற்று நடைபெற்ற தேர்வில்  116 மாணவர்கள் மட்டுமே தேர்வில் பங்கெடுத்து கொண்ட நிலையில் 127 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.