வேப்பங்குப்பம் அருகே தெருக்கூத்து கலைஞர் ஒருவர் வேஷம் கட்டி நாடகத்தில் நடித்து கொண்டு இருந்தபொழுதே மாரடைப்பால் இறந்தது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம், மேல் அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கமலநாதன் (52). விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், சிறு வயது முதலே தெருக்கூத்தின் மீது கொண்ட ஆர்வத்தினால் முறையே தெருக்கூத்து கலை பயின்று ,   இதுவரை நூற்றுக்கணக்கான தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். இவர் ஓம் சக்தி நாடக மன்றம் என்ற கலைக் குழுவை சொந்தமாக தொடங்கி, நாடக குழுவின்  ஆசிரியராகவும் பொறுப்பு வகித்து வந்துள்ளார்.



இந்த சூழலில், மேல் அரசம்பட்டு, மடிகம் கிராமத்தில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடைபெற்ற காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு “அர்ஜுனன் தபசு” என்ற தெருக்கூத்து நாடகம் நடத்தப்பட்டது. நாடகத்தில் ஓம் சக்தி நாடக மன்றத்தின் ஆசிரியர் கமலநாதன் அர்ஜுனன் வேடம் அணிந்து ஆகஸ்ட் 9ஆம் தேதி விடியற் காலை 5: 30 மணியளவில் ஆடி கொண்டு இருந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனைப் பார்த்த சக கலைஞர்கள் அவரை மீட்டு ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.


அப்போது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். தெருக்கூத்து கலைஞரின் மீது அதீதப் பற்று கொண்ட கலைஞர் கமலநாதன். இவர் நாடகம் ஆடி கொண்டிருக்கும் போதே உயிரிழந்த சம்பவம் சக கலைஞர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வேப்பங்குப்பம் போலீசார் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 



இவரது இறப்பு தொடர்பாக, மேல் அரசம்பட்டு  கிராமத்தின் ஊர் நாட்டாமை தரணிவாசனிடம் பேசிய பொழுது, கமலநாதனின் தந்தை, பாட்டன் என அனைவரும் விவாயசை குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான். அவர்களுக்கு சொந்தமாக 3 ஏக்கர் விவசாய பூமி இருந்த பொழுதிலும் , நாடகம் மற்றும் தெருக்கூத்து உள்ளிட்ட கலைகளின் மேல் இருந்த பற்றுகாரணமாக தெருக்கூத்து கலையை கற்று கொண்டு, சொந்தமாக நாடக கம்பெனி ஒன்றை நடத்தி வந்தார்.



அவருக்கு பங்குஜவல்லி என்ற மனைவியும் இரண்டு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் இவரது இந்த திடீர் மரணம் அவரது குடும்பத்திற்கும் இல்லாமல் ஒட்டுமொத்த குடும்பத்திற்கே பேரிழப்பு என தெரிவித்தார்.